எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts
Tuesday, January 3, 2012

கயத்தாறு நோக்கிய பயணம்..- கட்டபொம்மனின் இறுதி நாட்கள் - 1

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே..
தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ஆரம்பிக்கின்றேன். இப்பதிவு ஒரு தொடர்பதிவு. இதன் தொடர்ச்சியான பாகங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொண்டு பதிவை ஆரம்பிக்கின்றேன்.

வியாபார நோக்கத்திற்காக ஆரம்பத்தில் இந்திய உபகண்டத்தினுள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்நாளில் மண்ணாதிக்க வெறிக்கு உட்பட்டனர் காரணம் மண்ணில் இருந்த வளமும், வீரமும் அவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுதான். அந்த வகையில் இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தென்னாட்டில் உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து முகஸ்துதி செய்து திறை செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டனர். அவர்களின் மிரட்டலுக்கும் படை பலத்திற்கும் பயந்து பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர். பலர் மண்டியிட்டனர்.
சிலர்தான் “தாம் உயிர் நீக்க நேரினும் வரிசெலுத்த முடியாது” என்று கூறினர். ஆங்கிலேயரையும் எதிர்த்து நின்றனர். அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவரின் அனல் தெறிக்கும் கோபத்தினை கண்ட ஆங்கிலேயர்கள் தமது நில ஆதிக்கத்திற்கு இவர் தடையாக அமைந்து விடுவார் என்பதை உணர்ந்தனர். போரின் மூலம் அவரை அடக்க எண்ணி யுத்தத்திற்கு தயாராகினர்.

மேஜர் ஜோன் பானர்மன் என்ற ஆங்கில தளபதி தனது பிரமாண்டமான கம்பனிப் படையுடன் 1799 செப்டம்பர் 04ம் திகதி பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு சிவலப்பேரி மார்க்கமாக பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தார்.
இந்நேரத்தில் ஏக காலத்தில் கப்டன் ஓ ரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற இதர ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி தங்களது படைகளுடன் போருக்கான வேகத்துடன் நின்றனர்.
ஜோன் பானர்மனின் படை 05.09.1799 காலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் வந்த இராணுவ வீரர்களும் ஆங்கிலேய படையுடன் இணைந்து கொண்டனர்.

இந்நேரத்தில் வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் மறத்தமிழர் படையும் தயாரானது. கட்டபொம்மனின் படையில் சிவத்தையா நாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திரபிள்ளை, சம்பரதி பொன்னப்ப பிள்ளை, ஃபாதர் வெள்ளை எனப்படும் வீரன் வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாத ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம் இவர்களுடன் பலர் உள்ளடங்கியிருந்தனர் .
போருக்கான ஆயத்தங்கள் இருபக்கமும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் நோட்டமிடும் நோக்கில் அதாவது கட்டபொம்மனின் யுத்த ஏற்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு வழிமுறையை பின்பற்றினர். அதுதான் துாது அனுப்பியது.
மேஜர் ஜோன் பானர்மன் தம்முடைய படையோடு இருந்த ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் துாதுவராக அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்துகட்டபொம்மன் உடனடியாக பானர்மன்னைச் சந்திக்கவும்” என்ற செய்தியை தெரிவித்தனர்.
அதற்கு கட்டபொம்மன் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.
எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்தரவு வந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப் பார்க்க முடியாது” என்பதாகும்.


"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
 அரசின் செயலாளரான அப்போது இருந்த ஜோசையா வெப்பிற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜோன் பானர்மென் 05.09.1799 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகளே அவை..

பெயரளவில் நடந்த சமரச முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலேயருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை என்பது ஆங்கிலேயர்களுக்கு மேலும் உறுதிபடத் தெளிவானது.

அடுத்த கட்டமாக போர்தான் தீர்வு என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். காலத்தால் அழியாத, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் ஆரம்பமானது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தெற்குக் கோட்டை வாசலும், வடக்குக் கோட்டை வாசலும் ஆங்கிலேய படையினரால் முதலில் தாக்கப்பட்டது. இந்த முதற்கட்ட போரில் ஆங்கிலேய படையின்  நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர். இருப்பினும் போர் தீவிமாக நடைபெற்றது. ஆங்கிலேய படையின் பீரங்கிகள் செயற்பட தொடங்கின.., அவை கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெறியத் தலைப்பட்டன.
இதனால் கோட்டையை இழந்து விடுவோமோ என்ற நிலையில் தீவிர ஆலோசனையை உடனடியாக மேற்கொண்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இறுதியில் திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்று விட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை நோக்கி விரைந்து சென்றார்.

மறுநாள் முழுவதும் கோட்டையில் இருந்த படைகளுடன் இடம்பெற்ற கடுமையான போரினை தொடர்ந்து 09.09.1799 காலை 09.30 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட அவர் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்களின் ஊடாக கட்டளையிட்டார்.
அந்த கடிதம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தன்மையை மேலும் பறை சாற்றி நிற்கிறது எனலாம். 
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம் எழுதியதாக அவரே அரசுக்கு 11.09.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegar, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.

கடிதங்களின் மூலமாக கட்டளைகளை பிறப்பித்த பின் ஆங்கிலேய படைகள் கட்டபொம்மனை தேடுவதற்கு தயாராகின. லெப்டினென் டக்ளஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், கப்டன் ஓ ரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்வதும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும் படியும் ஆங்கிலேயருக்கு தகவல் தந்தார். உற்சாகமடைந்த பானர்மென், குறிப்பிட்ட அளவு படைவீரர்களுடன் கப்டன் ஓ ரெய்லியையும் லெப்டினென் டக்ளஸையும் எட்டயபுரம் படையினருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டயபுரத்தாரின் படைகள் கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எதிர்கொண்டன. இச்சம்பவம் 10.09.1799 அன்று நடைபெற்றது. இரண்டு தமிழர் படைகளுக்குமிடையில் போர் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். போரின் முடிவில் ஆறு வீரர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரது தம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை ஆங்கிலப் படையினர் அப்போரின் போது கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்று எட்டயபுரம் செய்த அந்த துரோகத்திற்கும், பாவத்திற்கு பரிகாரமாகவே ஆங்கிலேயரை எதிர்க்க பின்நாளில் பாரதியார் அதே மண்ணில் தோன்றினார் என்று பலர் இன்று கருதுகின்றனர்..!)

சரி நண்பர்களே..
இந்த வரலாற்று பயணத்தின் அடுத்த பாகத்தினை எதிர்வரும் வாரத்தில் தருகின்றேன்.
அதற்கிடையில் மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன்.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,



Continue reading →
Saturday, November 26, 2011

பாலையில் ஒரு பார்வை

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

                                பொழுதுபோக்கு என்ற ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் அறிவுபூர்வமான-மனசுக்கு நெருக்கமாகும் படங்கள் அபூர்வமாகவே எடுக்கப்படுகின்றன. சமீபகாலமாக தமிழ் திரையுலகின் வழக்கமான பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத் தொடங்கும் படங்களை வேறு வழியில்லாமல்தான் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது.

                                திரைப்படம் என்பது மற்ற எல்லா கலைப்படைப்புகளையும் போலவே உணர்வுபூர்வமான கலைப்படைப்புதான் அது சரியான அர்த்தத்துடன் எடுக்கப்படும்போது காலங்களை கடந்து நிலைத்து நிற்கின்றது. அதனால் தான் மனிதன் கற்கால குகைச் சுவர்களில் ஓவியம் வரைய ஆரம்பித்த காலத்தில் இருந்து, மக்களின் கலையாக வெளிப்பட்ட அனைத்தும் காலங்களைக் கடந்து மனிதனின் வாழ்வியலையும், அவனது படைப்பாற்றலையும், கலைத்தாகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான திரைப்படங்களின் வரிசையில் வைத்து பேச வேண்டிய திரைப்படங்களுக்குரிய தகுதியை பாலை முதல் பார்வையிலேயே பெற்றுவிடுகிறது.

                                மக்களின் வாழ்க்கை முறையை வெளிநாடுகளில் ஆவணப்படமாகவும், கற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாகவும் மானிடவியல் துறைகளும், அருங்காட்சியகங்களும் பயன்படுத்துகின்ற நிலையில் பாலை திரைப்படம் ஆவணப்படத் தன்மையுடன் இல்லாமல் நாயகி காயாம்பூவின் (நடிகை ஷம்மு) ஓலைச்சுவடி வழியாக அந்தக் காலத்திற்க்கு நேர்த்தியான திரைக்கதையுடன் அழைத்துச் சென்றுவிடுகின்றது. பொதுவாகவே, வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் ஆவணப் படத்தன்மைக்கு கட்டுப்பட்டு விடுகின்றன. ஆனால் அப்படியானதொரு நிலை பாலைக்கு ஏற்படவில்லை. காடும் காடு சார்ந்த நிலமாகிய முல்லை நிலத்தில் இருக்கும் இரண்டு குடிகளுக்கிடையில் நிலவும் போர்தான் கதை. ஆனால் இது வரலாற்றில் மீண்டும் மீண்டும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அரசர்களின் முகஸ்துதி கதையாக இல்லை, சாதாரண மக்களின் வாழ்வியல் கதை. அந்த வகையில் இந்தப் படம் மக்களின் உணர்வுகளை, வரலாற்றை படம்பிடித்து நிற்கின்றது. 

                                 2300 ஆண்டுக்கு முற்பட்ட நமது சமூகத்தின் வாழ்வியல் காட்சிப்பேழைகளினால் கவிதைகளாக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலிப பருவத்தின் காதலும் அது சார்ந்த விடயங்களும் அதை அறிந்த சமூகம் அவர்களை அங்கீகரித்து மேற்கொள்ளும் திருமணம் போன்ற விடயங்கள் எம் பண்பாட்டின் அசையாத அம்சங்கள். இவ்வாறான வாழ்க்கையில் முல்லைக்குடி மக்கள் எளிமையோடு அவர்கள் சார்ந்த அண்டை சமூகத்துடன் நேர்மையாகவும் இணைந்திருக்க விரும்புகின்றனர். இருந்த போதும் ஆயக்குடி சமூகம் அந்த நேர்மையை தமக்கு ஏற்றதாக்கி துரோகம் இழைக்கின்றது. முரண்பட்ட சமூகத்தில் பலமான சமூகத்திற்காக கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்த மக்களின் நிலை 2000 ஆண்டுகள் கடந்தும் இன்றும் சில இடங்களில் நிலைத்திருப்பதும் அம் மக்கள் சாதிய அடிமைத்தனத்தினுள் கட்டுப்பட்டு குற்றுயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் காலவோட்டத்திற்கேற்ப திரைப்படத்தை எம்முடன் இணைக்கின்றது. 

                                  இது போல அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனதில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. மிகைப்படுத்தப்படாத சமூகங்களுக்கிடையிலான போரியல் அபாரம். யானைகளை விரட்டிக் கட்டுப்படுத்தலும் அதனோடு சார்ந்த அக் காலத்தின் இதர போரியல் முறைகளும் எம் கண்களையும் எண்ணங்களையும் அகல விரிக்க வைக்கின்றன. போரில் வெற்றி வாகை சூடுவதற்கு தேவையான அம்சங்களை முல்லைச் சமூகத்தின் முதுவன் சுட்டிக் காட்டும் அனைத்து விடயங்களும் களங்கமற்ற உண்மைகள்.  
 “முல்லைக்கொடிக்கு அடிமைகள் தேவையில்லை, முல்லைக் கொடியாருக்கும் அடிமையும் இல்லை”

                                 வீரவசனம் முழங்கும் ரோமப் பேரரசர்கள் போல உடையணிந்த கட்டபொம்மன்கள் திருமணம் செய்துகொள்ளாமல் முதுமையால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் அறநெறி கற்பிக்கும் ஔவை(யார்)களாவும் தமிழ் மூதாதையார்கள் அடையாளப்படுத்தப்பட்ட சோகம் தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் நிகழ்ந்த வண்ணமேதான் இருந்தன. வரலாறு பல ஔவைகளை சந்தித்திருக்கும், அவர்கள் எதைப் பற்றியெல்லாம் பாடினார்கள், அவர்களது கற்பனையும், தைரியமும் எப்படியானவை என்பது தொடர்பாக அத்துறை சார்ந்தவர்களுக்கே அதிகமாக தெரிந்திருப்பதுமில்லை,-போய் சேர்ந்திருப்பதுமில்லை. இவ்வாறான துரதிருஷ்டமான சூழ்நிலையில் ஔவையின் வரிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் அடி மனக்குரலாக மாற்றி அவளது மனதில் தோன்றும் விருப்பங்களை வெளிப்படுத்தி நிலைபெற்று நிற்கின்றது பாலை. 

                                 இவற்றுடன் அக்கால வாழ்வியலில், சொந்தங்களுக்குள் நீடித்த வெளிப்பாடான தன்மை, இயல்பை சிதைக்காத எளிமை முதலியன இத்திரைப்படத்தில் மிக சிறப்பாக பிரதிபிம்பமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான காட்சிகள் உயிருட்டமாக அமைவதற்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அபிநந்தன் தன் முழு திறமையையும் பயன்படுத்தி பாலையை ஒளி ஓவியமாகவும் படைத்திருக்கின்றார்
இதுவரை காலமும் மிகைப்படுத்தப்பட்ட நடிகர், நடிகைகளின் நடிப்பு, ஆடைகள், ஒப்பனை, அலங்காரம் என எப்போதும் அனாவசியங்களையே பார்த்து பழகிப் போன எம் கண்களுக்கு மிகையில்லாத வகையில் கதாபாத்திரங்களின் நடிப்பும், ஒப்பனைகளும், காட்சியமைப்புகளும் அமைக்கப்பட்டிருப்பது சற்று புதியவைதான், ஏன் உறுத்தலாகவும் கூட இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் இதனை ஒரு படைப்பாக எண்ணி அதற்குரிய எல்லைகளுக்குள் நின்று பார்த்தால் ரசனைமிக்கதாக இத்திரைப்படம் மாறி நிற்கும்.

                                முதுவன் என்னும் பாத்திர பெயர், இயற்கை அம்சங்களை உடலில் பொறித்துக் கொள்ளுதல், மலராலான அலங்காரங்கள், நடன அசைவுகள், ஆடை அணிகலங்களின் அணிதல் முறை என பல்வேறு இடங்களில் ஆதி தமிழனின் பண்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் நின்று அழகாக பிரதிபலித்துச் செல்கின்றது பாலை. 
இத்திரைப்படத்தில் நடித்த சேலம் பெரியார் பல்கலைக்கழக ‌இதழியல் துறைத்தலைவர் பேரா.நடராஜன் ‌‌அவர்களை தமிழக பயணத்தில் நான் சந்திக்க கிடைத்தமையும் மகிழ்ச்சி።

                                ஆழ்ந்த தேடல், ஆய்வுகள், கடுமையான உழைப்பு, படைப்பின் மீதான பிடிப்பு போன்றவை இல்லையேல் இது போன்றதொரு திரைப்படம் தமிழ் சினிமாவில் சாத்தியமில்லை. செந்தமிழன், மற்றும் அவரது குழுவினரின் அயராத உழைப்பினை நாம் இத்திரைப்படத்தைப் பார்ப்பதனால் மாத்திரமே அங்கீகரிக்க முடியும். கலைஞனுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டியது நல்ல ரசிகர்களின் கடமை. படத்தின் மூன்று பாடல்களும் அருமை. இசையமைப்பாளர் வேத்பிரகாஷ் நவீன இசை ஆர்ப்பரிப்புகளை உதறிதள்ளிவிட்டு, தமிழனுக்குரிய இனிமையான இசைகளை கொண்டு இதயங்களை வருடிச் செல்கின்றார்.பெரும் பிரமாண்டமான தயாரிப்புகளை மேற்கொண்டும், மசாலா தனமான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முகமாகவும் வரலாற்றை திரிவுக்குட்படுத்தி தேவையற்ற இடைச்செருகல்களை மேற்கொண்டு தமிழர் பண்பாடு என்ற பெயரில் என்னென்னமோ வெறுப்பு தரும் விடயங்களை தமிழ் சினிமா சந்தையிலும், உலக சினிமா சந்தையிலும் பணம் கொட்டிக்கிடக்கும் திரைப்பட நிறுவனங்களும் விநியோகஸ்த நிறுவனங்களும் வியாபாரம் செய்து வருகின்ற இன்றைய பின்னணியில் இந்த பாலை திரைப்படம் ஒரு ஆத்மார்தமான படைப்பு. 

குறிப்பு- பாலை திரைப்படத்தை இலங்கையில் எந்த திரையரங்குகளும் காட்சிப்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்። நான் கூட இணையத்தின் வாயிலாகதான் பார்த்து ரசித்தேன் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்። இணைய சுட்டியை தந்துதவிய நண்பனுக்கு என் நன்றிகள்።


நன்றி
மீண்டும் சந்திப்போம்..,
என்றென்றும் அன்புடன்..,




Continue reading →
Thursday, July 7, 2011

கைவிடப்பட்டுள்ள நிலையில் வரலாற்று சின்னங்கள்

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணத்தில் மன்னர் காலம் தொட்டு இன்று வரை அதிகளவில் பிரபல்யம் பெற்ற பிரதேசமாக காணப்படுவது நல்லுார் பிரதேசமாகும். மன்னர் காலத்தில் அவர்களின் இராசதானிகள், அரண்மனைகள் என அரசியல் ரீதியாகவும் ஆலயங்கள் என்பதனுாடக பண்பாட்டு ரீதியிலும் நல்லுார் பிரபல்யம் பெற்றிருந்தது. இதனால் வாழையடி வாழையாக வந்த சந்ததியினருக்கு யாழ்ப்பாணம் என்றதும் நல்லுார் சட்டென ஞாபகம் வரும் விதத்தில் மனதில் பதிந்திருந்தது, பதியப்பட்டிருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போதும் இது அசையாதிருந்தது. விடுமுறையை களிப்பதற்காக யாழ்ப்பாணம் வருபவர்களின் பிரதான தரிசனமாக நல்லுார் காணப்படுகிறது. உள்ளுர் மக்களாலும் வெளியுர் மக்களாலும், வெளிநாட்டு மக்களாலும் நிரம்பியிருந்த நல்லுார் 1980 களின் ஆரம்ப காலத்தில் இலங்கையில் உண்டான பதற்ற நிலையும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற 30 ஆண்டு யுத்தம் என்பன காரணமாக வெறிச்சோடி போகும் நிலை உண்டானது.

2002ல் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையின் போது வெளி பிரதேச மக்களின் வருகை யாழ்ப்பாணத்தை நோக்கி மீள ஆரம்பித்ததும் நல்லூர் பிரதேசம் மேலும் பிரபலம் பெற ஆரம்பித்தது. எனினும் இது 2007 வரையே தொடர்ந்தது.

2009ல் யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதி சூழல் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு யாழ்ப்பாணத்தை நோக்கி திரும்பியது. தினசரி தென்னிலங்கை சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பலநுாற்றுக்கணக்கில் யாழ் வர தொடங்கினர். இதன் காரணமாக சோர்ந்திருந்த நல்லுார் மீண்டும் சுறுசுறுப்பாகியது. 

பொதுவாகவே நல்லுார் கந்தசுவாமி ஆலயம் இலங்கை பற்றி அறிந்தவர்களின் மத்தியில் பிரசித்தி பெற்றது. ஆகையால் யாழ்ப்பாணம் நோக்கி வரும் இந்தியா உட்பட பல நாடுகளின் பயணிகள் நல்லுார் வந்து செல்ல தவறுவதில்லை. நல்லுார் முருகன் ஆலயம் பெரிய அழகிய கோபுரம், புதிதாக அமைக்கப்படும் கோபுரம், பரந்த ஆலய வளாகம் என மிக பிரமாண்டமான வடிவமைப்புடன் தோற்றமளிக்கின்றது.
மேலும் ஆலயத்தினை சூழ உள்ள திருமண மண்டபங்கள், மணிமண்டபங்கள், நினைவுகற்கள் முதலியவும் சுற்றுலா பயணிகளின் பார்வையில் அகப்படுகின்றன.


பொதுவாக சுற்றுலா பயணிகளின் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பாக இருப்பது குறித்த ஓர் இடத்தில் அனேக விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். அதனால் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நல்லூர் ஆலய சுற்றுப்புறத்தில்  விற்பனை நிலையங்கள் பல தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நல்லுார் சிறு வர்த்த நகராகி விட்டது

இவை பயணிகளை கவர்ந்திழுக்கின்றன என்பது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் மகிழ்விக்க கூடிய இடங்களும் நல்லுாரை சுற்றி காணப்படுகின்றன. ஆனால் அவை இன்று கவனிப்பாரற்ற நிலையில் சிதையும் தறுவாயில் உள்ளன. அதனால் அவை அனுபவிக்கும் நிலையில் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.
தரைமட்டமாக்கப்பட்டுள்ள பூங்காவின் ஒரு பகுதி

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வீதியில் சுமார் 800m தொலைவில் பூங்கா ஒன்று காணப்பட்டது. அன்று இப்பூங்காவானது சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களுடன் அழகிய தோற்றத்துடன் ரம்மியமாக விளங்கியிருந்தது. ஆனால் இன்றோ இப்பூங்கா கைவிடப்பட்ட பிரதேசம் போல காட்சியளிக்கின்றது. சிறு வயதில் நான் விளையாடிய இந்த கிட்டுப்பூங்காவில் இருந்த ஊஞ்சல்கள் இன்று ஆட்டமின்றி காணப்படுகின்றன. அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை குகை, செயற்கை குன்று செயற்கை நீர்வீழ்ச்சி என்பனவும் இன்று அழியும் நிலையில் காணப்படுகின்றன.



பூங்காவில் உள்ள குகை ஒன்றின் சிதைவடைந்த பகுதி

தொடர்ந்து பருத்தித்துறை வீதியில் செல்கையில் உள்ள நுழைவாயில், மந்திரி மனை முதலியனவும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. இக்கட்டிடங்களின் சுவர்கள் வெடித்தும்,கட்டிடத்தின் சுவர்களை ஊடறுத்து மரங்கள் வளர்ந்திருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. நீண்டகாலமாக இவற்றை பாதுகாக்கும் வேலைகள் எதுவும் இக்கட்டிடங்களுக்கு இடம்பெறவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே.



தமிழா்களின் பண்டைய வரலாற்றை பேசிநிற்கும் தடங்களில் முக்கிய இடம் வகிக்கும் இவ்விடங்களுடன் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் சிலை ஒன்றும் இங்கு காணப்படுகின்றது. தமிழர்களின் ஓயாத வீரத்தினை பாராட்டி நிற்கும் இச்சிலையானது இன்று முறையான பராமரிப்பு இனை்மையால் உடைந்து விடும் சாத்தியத்தில் காணப்படுகின்றது.

இச்சிலையில் உள்ள சங்கிலிய மன்னனின் குதிரையினது முகமானது மிகவும் சிதைவடைந்துள்ளது. மன்னனின் பட்டத்து குதிரையின் மூக்கு உடைந்த நிலையில் அந்த சிலையை நான் கண்ட போது பல்வேறு நடைமுறை சம்பவங்கள் மனதில் வந்து போயின. இவ்வாறான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள் பல யாழில் சிதைவடைந்த நிலையில் இருப்பது மனவேதனையை தரும் விடயங்களாகவே அமைகின்றது.

இவ்வாறன வருந்த தக்க விடயத்தின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இங்கு,

சுற்றுலா பயணிகளினால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் மிக அதிகமாகும். அதிலும் காலநிலை ரீதியாக நோக்குகையில் யாழ்ப்பாணத்தின் காலநிலையானது வருடமொன்றிற்கு எட்டு மாதங்கள் வரை சுமுகமாகவே இருக்கும். இதனால் அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை யாழ் நோக்கியதாக அமைகின்றது. ஆனால் இங்கிருக்கின்ற வளங்கள் உரியவர்களினால் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் வேண்டா வெறுப்பாக கைவிடப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் யாழ்ப்பாணம் வரும் இவர்கள் திரும்பிச்செல்லும் போது ஏமாற்றத்துடனேயே செல்கின்றனர்.

ஆகவே யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பகுதியாக விளங்கும் நல்லுார் பகுதியை குறித்த தரப்பினர் துரித முயற்சி எடுத்து அழகு படுத்துவதன் ஊடாக இனி வரவிருக்கும் சுற்றுலா பயணிகளையும் கவரகூடியதாக இருக்கும். அத்துடன் யாழ்ப்பாணத்தின் வரலாறு பேசும் சின்னங்கள் அழிவடையாமல் பாதுகாக்கப்படுவதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு யாழ் மண்ணின் தொன்மை புலப்படுத்தபடும். ஆகையால் இதற்கான நடவடிக்கைகளை குறித்த தரப்பினர் மேற்கொள்வது காலத்தின் காட்டாயமாகும்.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,
Continue reading →
Tuesday, July 5, 2011

அஸ்தமனத்தில் உதயசூரியன் - நேரடி பதிவுகள்

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

சொந்தமாக காணி, சொந்தமாக ஒரு வீடு, கை நிறைய சம்பளத்துடன் வேலை, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலம் தரக்கூடிய சிறந்த கல்வி என அனைத்து வசதிகளுடன் வாழும் எம்மவர்கள் மத்தியில் இவை அனைத்தும் இன்றுவரை நிறைவேறாத கனவுகளாக மாறி இருக்கின்ற மக்களும் எம்மிடையே இருக்கின்றனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களின் கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாகவே ஒர் இடத்தில் வசித்து வந்தாலும் சொல்லிக்கொள்ள கூடிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற மக்களை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உதயசூரியன் என்ற கிராமத்தில் கண்டோம்.

பெயரில் தான் உதயசூரியன்..அவர்களின் வாழ்க்கையோ இன்னும் அஸ்தமனத்தில்தான்.

சாவகச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து கச்சாய் வீதியில் சுமார் 1500m தொலைவில் இருக்கும் சேரிக்குடியிருப்பு கிராமமே இந்த உதயசூரியன் கிராமமாகும். நாங்கள் கிராமத்தினுள் நுளைந்ததும் வேற்றுக்கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்த்தனர் அம்மக்கள். காரணம் அவர்கள் இருந்த நிலையில் நாம் அவர்களுக்கு அப்படித்தான். எம் கண்ணில் எதிர்பட்ட முதல் பெண்மணியிடம் முதலில் பேச்சுக்கொடுத்த போதுதான் தெரிந்தது அது ஒரு கைவிடப்பட்ட ஒதுக்குப்புறமான நிலப்பகுதி என்று. கடற்கரை பகுதியோடு சார்ந்த நிலம் என்பதால் அது சதுப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் அதனால் அரசினால் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவும் 2006 வரை அவ்விடம் இராணுவ வலயத்தின் கீழ் இருந்ததாகவும் அப்பெண் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பம் முதலே தாம் வசித்து வரும் பிரதேசம் இது என்றும் சிறிது காலம் வரை (இங்கிருந்து இராணுவம் வெளியேறும் வரை) அருகில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பில் வசித்து வந்ததாகவும் கூறிய அவர், இவ்விடத்தில் இராணுவம் வெளியேறியவுடன் மீண்டும் வந்து குடியேறியதாவும் தெரிவித்தார்.
அவர்களுடைய வீடுகளை பார்க்கும் போது 4 தடிகளை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு முழுமைபெறாத வானம் பார்க்கும் கூரையோடு கொண்ட சிறு கூடு போல காட்சியளித்தது. மழை வந்தால் அவர்கள் வீட்டை நாட வேண்டிய தேவையில்லை.. ஏனெனில் வீட்டிற்குள் நின்றாலும் நனைவதை அவர்களால் தவிர்க்க முடியாது. கணவனின் நாளாந்த 300 ருபாய் வருமானத்தில் (அதுவும் உறுதியாக கிடைக்காது) 4 பிள்ளைகளையும் வளர்ப்பது எங்கு?? வீடு வேய்வது எங்கு..??

அதிலும் ஒரு சிக்கல் இருப்பதை அவருடன் மேலும் உரையாடும் போதுதான் அறிந்தோம். அந்த பகுதியில் இருக்கும் எவருக்கும் அந்த காணிகள் சொந்தமாக வழங்கப்படவில்லை. அது அரசாங்க காணி என்பதால் அரசின் மனதில் எப்போது தோன்றுகின்றதோ அப்போதே அவர்களுக்கு அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். ஏற்கனவே யாழப்பாணத்தின் வேறு சில இடங்களில் அரசு தன் காணிகளை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது. இது பற்றி அந்தப் பெண் கூறிய விடயங்களை இங்கு ஒலி வடிவில் தந்துள்ளேன்.. கேட்டறிந்து கொள்ளுங்கள்.



அப்பெண்ணுடன் உரையாடிய பின் அங்கு இருக்கும் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளிகள் வசித்துவரும் இடத்தை அடைந்தோம் (அதுவும் உதயசூரியன் கிராமம் தான்). அங்கு ஒரு பாலர் பாடசாலையில் மழலைகளுக்கு கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவருடன் உரையாட ஆரம்பித்தோம். மயுரிகா என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் குறிப்பிடுகையில் தமது சொந்த இடம் கிளாலி என்றும் அங்கு இன்னும் மக்கள் குடியேற அனுமதிக்காமையால் இங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். பாலர் பாடசாலைகளுக்கு மாணவர்களை பெற்றோர் ஒழுங்காக அனுப்பி வருவதாகவும் ஆனால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் வீதம் குறைவு என்றும் அவர் எம்முடன் உரையாடும் போது தெரிவித்தார். இது குறித்த காரணங்கள் பற்றி மற்றொரு பதிவில் பின்னர் கூறுகின்றேன்.

மேற்படி ஆசிரியை தமது வருமானம் பற்றி கூறும் கருத்துகள் இங்கே..






அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் ஒரு முதியவருடன் உரையாடுமாறு அப்பகுதி மக்கள் எமக்கு கூறினர். அதற்கான காரணம் அவரிடம் இருந்து நிறைய விடயங்களை அறிய முடியும் என்பதால் ஆகும்.









அவரை அடையாளம் கண்டு அவருடன் பேச்சை ஆரம்பித்தோம். 1960 களில் இருந்து அப்பகுதியில் வசித்து வரும் அம்முதியவர் இன்று தனித்து வாழ்ந்து வருகின்றார். அவரின் மனைவி பிள்ளைகள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று விட்டனர். அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் கஸ்டங்கள் பற்றி அவர் கூறுகையில் எந்த நிறுவனமும் தமக்கு எவ்வித உதவிகளும் செய்ததில்லை என்றும், அரசிற்கு தாம் இங்கு இருப்பது கூட மறந்து விட்டது எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தமக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவோம் என பல தடவைகள் உரியவர்களால் தெரிவிக்கப்பட்டாலும் இன்று வரை எவ்வித பலனும் தமக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அப்பகுதியில் வாழும் மக்களின் ஒருமித்த குரல் என்னவென்றால் ஏனைய மக்களை போன்று நாம் வாழ்வதற்கு இப்பகுதியை தமக்கு சொந்தமாக்கி தாருங்கள் என்பதே.
அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் பல உதவிகள் வழங்க முன்வந்த போதும் சொந்தக்காணி இன்மையால் அவர்கள் எவ்வித உதவிகளையும் பெற முடியாமல் இருக்கின்றனர். நகர சபைக்கு சொந்தமான சிறு நிலப்பரப்பு அப்பகுதியில் இருந்தும் அவர்களினால் கூட அப்பகுதியில் வசிக்கும் தம் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். மழைகாலங்களில் இடம்பெயர்ந்து அருகிலுள்ள பாடசாலையில் தங்கியிருக்கும் போது மாத்திரம் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் அதாவது சமைத்த உணவு, உடுதுணிகள் முதலிய உதவிகள் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அப்பகுதிக்கான மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என அப்பகுதிக்கான மீள் எழுச்சிச்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார். அதன் படி சனசமூக நிலையம், முன்பள்ளி, பொதுக் கிணறு முதலியன இத்திட்டத்தின் கீழ் அப்பகுதிக்கு அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்பகுதி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காகவும் வீதி அமைப்பதற்காகவும் மாதிரிப்படம் அமைத்து நகர சபைக்கு வழங்கியிருப்பதாகவும் அவர்களால் எவ்வித முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிராமத்திற்கான வரைபடம்
எனவே இப்பகுதி மக்களுக்கான சொந்த நிலம் எப்போது கிடைக்கும்? அவர்களும் எப்போது இயல்பு வாழ்வுக்கு திரும்புவது? போன்ற விடை தெரியா வினாக்களுக்கு மத்தியில் மற்றுமொரு பிரச்சனை எமக்கு கிடைத்தது வேறொரு தரப்பில் இருந்து.. அப்பிரச்சனையானது அப்பகுதியில் வாழ்பவர்களின் எதிர்காலம் தொடர்பானதாகும். அப்பிரச்சனை பற்றி பார்ப்போமானால்,

மாணவர்களில் கல்வி நிலை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. பெற்றோர்களின் மோசமான நடத்தை, கவனிப்பின்மை முதலியவற்றினால் அப்பகுதி மாணவர்களின் வரவு பாடசாலைகளில் பின் தங்கி காணப்படுகின்றது. இது குறித்து அப்பகுதியில் இருக்கும் மெதடிஸ்த மிசன் பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை கோலம் ஏனைய பகுதி மக்களில் இருந்து வேறுபடுவதாக இருக்கின்றது. இளவயது திருமணம்(பெண்கள் 15-18 வயதுக்குள்ளும் ஆண்கள் 17-20 வயதுக்குள்ளும் திருமணம் செய்கின்றனர்), நெருக்கமான குடியிருப்பு கோலம் என்பதால் உண்டாகும் கலாச்சார முரண்கள், அதனால் ஏற்படும் பலதார திருமணங்கள்(இதில் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை கொண்டுள்ளனர்) முதலியன பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகள் தொழிலுக்கு அனுப்பப்டுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இன்மையும்,கல்வியறிவு போதியளவு இன்மையுமாகும் என அவர் தெரிவித்தார். அப்பகுதிக்கும் கட்டாய கல்வி செயற்பாடுகளும் ஏனைய விழிப்புணர்வு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை படிப்படியாக நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர் அதற்கு உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சாவகச்சேரி ட்றிபேக் கல்லுாரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
அப்பகுதியில் மக்களுக்கு ஒரு இலட்சிய பாதை இருப்பதில்லை. ஒரு உடனடி பணம் தரக்கூடிய சிறு தொழில், மதுபோதை, வாழ்க்கைக்கு ஒரு துணை அதுவும் சாதாரண தர கல்வியின் போதே என ஒரு குறுகிய வாழ்க்கையையே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறு வயதில் ஒழுங்காக கற்று வரும் பிள்ளையும் குறித்த வயதை எட்டியதும் தன் சமூகத்தில் இருக்கும் தன்வயதொத்தவர்களின் செயற்பாட்டை அவதானித்து கல்வியை கைவிடுகின்றது. உதாரணத்திற்கு தமது கல்லுாரியில் கற்ற ஒரு பெண் பிள்ளை சாதாரண தரத்தில் 6A சித்திகளுடன் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த போது திருமணம் செய்து கல்வியையும் கைவிட்டதாகவும் தெரிவித்தார். சிறு வயது திருமணம் அவர்களுக்கு நிலைப்பதில்லை என்ற உண்மையையும் அவர் தெரிவித்தார்.

இருந்தும் ஒரு சிலர் அப்பகுதியில் இருந்து விலகி தமது வாழ்க்கை கோலத்தை மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு காரணம் அவர்களுக்கு உண்டாகும் மாற்றம் வேண்டிய சிந்தனையே. ஆனால் இச்சிந்தனை அங்கிருக்கும் ஏனையோருக்கும் உண்டாக வேண்டும் என்றால் உரிய தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒழுக்கக்கல்வி அப்பகுதி மக்களுக்கு அவசியம். இதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தான் ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே மக்களின் வாழ்வு என்பது அவரவர் கைகளில் என்பதோடு அடுத்தவரின் வழிகாட்டலிலும் தங்கியுள்ளது. அதே போன்று அஸ்தமிக்கும் தறுவாயில் உள்ள உதயசூரியன் மக்களிற்கும் ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும். அவர்களும் நம்மவர்கள் தான். அவர்களுக்கான நிலத்தினை அரசு வழங்குவதோடு அப்பகுதி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் இப்போது எது சரி என நினைத்து வாழ்கின்றார்களோ அது தவறு என்பதை உணர்த்த வேண்டும். அதற்கு மத அமைப்புகள், சமூக அமைப்புகள் ஏன் சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் இப்படியான உதயசூரியன் கிராமம் போன்ற கிராமங்கள் இலங்கையில் ஆங்காங்கே பரவி இருக்கும். அவை அனைத்தும் இனங்காணப்பட்ட வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.
ட்றிபேக் கல்லுாரியில் எம்மை வரவேற்ற வார்த்தைகள்

இந்த கிராமத்திற்கான பயணத்தில் என்னோடு இணைந்து கொண்ட நண்பன் கஸ்ரோ மற்றும் நண்பிகளான துவாரகி, ஹம்ஷா ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன். அவர்களின் பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு விரைவில் தருகின்றேன்..


கஸ்ரோவின் வார்ப்புக்களில் இருந்து கதை சொல்லும் படங்கள்


நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,
Continue reading →
Wednesday, June 15, 2011

யாழ் - வற்றாப்பளை. ஒரு வரண்ட பயணம் (புகைப்பட தொகுப்பு)

7 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் வாசகர்களே,




I’m Celebrating World Bloggers’ Day 2011

Theme: The Roles of Bloggers




பதிவர்களுக்கு வாழ்த்துகள்..

மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அந்த மகிழ்ச்சி இப் பதிவில் நிச்சயம் இருக்காது. ஏனெனில் சிதைந்த மண்ணின் கதை பற்றிய புகைப்பட தொகுப்பே இன்றைய என் பதிவு.

கடந்த 13.06.2011 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த பொங்கல்,பூஜை நிகழ்வுகளுக்காக நானும் என் நண்பர்களும் திங்களன்று யாழில் இருந்து முல்லைத்தீவு புறப்பட்டோம். A9 வீதி ஊடாக மாங்குளம் வரை சென்று பின் முல்லைத்தீவு சென்றோம்.

வெள்ளையர்களிடம் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி நின்ற கோவில் அல்லவா அது..

ஆலயத்தில் இரவு முழுவதும் தங்கி மறுநாள் (14.06.2011) காலையில் மீண்டும் யாழ் திரும்பினோம் புதுக்குடியிருப்பு வீதி வழியாக..
இந்த வீதியுடனான பயணம் தந்த வேதனைகள் சொல்லிலடங்காதவை.. நாம் அன்று பார்த்த இடம்தானா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தன அவற்றின் நிலை. இவ்வேதனைகளை வார்த்தையில் சொல்வதை விட பார்த்து உணர்வது சிறந்தது.

முறிகண்டியில் இலங்கைப் பாடகர் திரு.ரகுநாதன் அவர்களுடன் எதிர்பாராத சந்திப்பு.

மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில்..

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஒட்டுசுட்டான் சந்தியில் வீதி விளக்கப்படம்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்


ஊற்றாங்கரை பிள்ளையார் கோவில்(தண்ணீர் ஊற்றுப் பிள்ளையார்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய காட்சிகள்.

ஆலய முகப்பு

நந்திக்கடல் (நேரம் மாலை 07.00)

                           
விமானப்படையினர் மேற்கொண்ட பூக்கள் சொரியும் நிகழ்வின் காணொளி..


நந்திக்கடலில் சூரியோதயம் (நேரம் காலை 06.20)


புதுக்குடியிருப்பு - அநாதைகளாக இங்கு இவைகளும் வெளியில் மக்களும்

செல்வந்த பூமியின் இன்றைய நிலை.



குண்டுகளால் எங்களை எதுவும் செய்ய முடியாது..இது நம்ம ஏரியா..


படைகளின் சேதமடைந்த சொத்துகள்


குறிப்பு :- இது ஒன்றும் அரசியல் ரீதியில் அமைந்த பதிவு அல்ல.. ஒரு யுத்தம் நடந்த பூமியின் உண்மைத் தோற்றத்தை உலகறிய செய்யும் முயற்சி மாத்திரமே.

படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அவற்றை தனித்தனியே க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவிலொரு பாடல்.
இன்றைய பதிவில் பகிரவுள்ள பாடல் 1970ல் வெளிவந்த “என் அண்ணன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலொன்றாகும்.
மக்கள் திலகம் M.G.R அவர்கள் நடித்த இத்திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு K.V.மகாதேவன் அவர்கள் இசையமைக்க T.M.சௌந்தரராஜன் பாடிய “கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே..” என்ற பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்பாடல் பற்றி என் முகப்புத்தகத்தில்..,

சரி நண்பர்களே நாம் மீண்டும் சந்திப்போம் மற்றொரு பதிவில்..,
நன்றி
என்றென்றும் அன்புடன்


Continue reading →
Photobucket