எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, January 14, 2012

தமிழ் எழுத்தியல் துறையிலும் ஊடக துறையிலும் பெண்களின் பங்கு.

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

வணக்கம் நண்பர்களே,
எனது 50வது பதிவினுாடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் பதிவுலக ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களனைவருக்கும் என் நன்றிகள்.
என்னை பதிவெழுத துாண்டியவை லோஷன் அண்ணாவின் பதிவுகள். 
எனக்கு களம் அமைத்து தந்தவர் அன்புக்குரிய மதிசுதா அண்ணா
இவர்கள் இருவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

............................................................................................................................................................................................................................................................................................................

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இந்தியா செல்ல முடிந்தது. அங்கு இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட கருத்தமர்வுகளில் இருந்து பல விடயங்களை கற்க முடிந்தது. அவற்றில் ஒரு கருத்தமர்வில் பகிரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பதிவு தயாராகின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் எழுத்து துறையிலும் ஊடக துறையிலும் அதிகம் சாதித்து வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு என்று சமூகத்தில் இருக்கின்ற வாய்ப்புகளும் காரணமாக அமைகின்றன. ஆண் ஒருவன் சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு தகுதியுடையவன் என பலரும் நம்புவதால் ஆண் படைப்பாளிகளை இன்று நாம் அதிகமாக பார்க்கின்றோம். ஆணுக்கு நிகரானவள் பெண் என்பது நிஜம். அதனால் எந்த துறையாக இருந்தாலும் இன்று பெண்களும் அத்துறைகளில் ஆண்களுக்கு இணையாக கோலுச்சி வருகின்றனர். அந்த வகையில் இன்று இதழியல் துறையில் சாதிக்கும் பெண்களும் பலர் உள்ளனர். அத்துடன் ஆண் இலக்கிய வாதிகள் பெண்களின் பெயர்களை தம் படைப்புகளில் புனை பெயராக கொண்டு எழுதி வருகின்றனர் என்பதன் ஊடாக பெண்கள் இலக்கிய படைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றதல்லவா?

பேராசிரியை தாயம்மாள் அறவாணன்

பெண்கள் பாரதியின் புரட்சிக்கு பின்னர்தான் சமூகத்தில் சாதிக்க வந்தனர் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும் இலக்கிய துறையிலும் இதழியல் துறையிலும் பெண்கள் தமது படைப்பாற்றலை சங்க காலத்திலேயே ஆரம்பித்து விட்டனர். சென்னை பல்கலைகழகத்தில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகின்றது.

நுால்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவரும் கொங்கு பத்திரிகையின் ஸ்தாபகராக விளங்குபவருமான பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பேராசிரியரும் தொடர்பியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியாராவார். கணவரின் இலக்கிய பயணத்திலும் கல்வி பயணத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23 நுால்களை இதுவரை வெளியிட்டு உள்ளார். இவற்றில் சிலப்பதிகாரத்தில் வாய்மொழி கதை, ஔவையார் நுால் என்பன பெருமை பெற்றவையாகும். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக சக்தி விருது, ஔவை விருது முதலிய விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலம் முதல் இன்று வரை உள்ள பெண் கவிஞர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர் தனது ஆய்வினை அடிப்படையாக கொண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது கருத்துரையை நிகழ்த்தினார். சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் அமைந்த பாடல்களில் பல பாடல்களை அக்காலத்தில் இருந்த பெண் கவிஞர்கள் பாடியுள்ளனர். அக்காலத்தில் இருந்த 473 புலவர்களுள் சுமார் 45 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கற்றுத் தேர்ந்த புலவர்களும் இருந்தனர். சாதாரணமான பெண்களும் இருந்தனர். குறத்தி இனத்தை சேர்ந்தவர்களும், பானை செய்யும் பெண்களும், சேலை துவைக்கும் பெண்களும் கூட கவிதாயினிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக குறத்தி இனத்தை சேர்ந்த இளையோதி, குளையோதி ஆகிய பெண் புலவர்களை குறிப்பிடலாம்.

சங்க காலத்தில் கவிபுனைய ஆரம்பித்த பெண்கள் தொடர்ச்சியாக கவிபுனைவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். அந்த வகையில் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மங்கையற்கரசியார் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் புலவர்கள் தோன்றிய வண்ணமே இருந்தனர். இவர்கள் ஆண் புலவர்களுக்கு சவாலாகவும் அவர்களின் கவித்துவத்திற்கு இணையாகவும் பாடல்களை பாடி வந்துள்ளனர். இவர்களில் புலமைப்போரில் ஈடுபட்ட ஔவையாரை இவ்விடத்தில் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும்.


பிற்பட்ட காலத்திலே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கவிஞர்களாக இருந்த ஜானகி அம்மையார், லட்சுமி அம்மையார் ஆகிய இருவரும் பெண் கவிஞர்களுள் முதன்மை பெறுகின்றனர். இவர்களில் லட்சுமி அம்மாள் வியாசட்ட முறையில் அதாவது ஒரு வரியில் அமைந்த விடயத்திற்கு நீண்ட தெளிவான விளக்கம் தருவது வியாசட்ட முறையாகும். அந்த வகையில் வியாசட்ட முறையில் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு தெளிவான பொருளுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஒரே ஒரு பெண் லட்சுமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து 19ம் நுாற்றாண்டின் பெண் கவிஞர்கள் பற்றி பார்த்தால் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். 1909ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆவண காப்பகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண்கள் பற்றிய தகவல்களை அறிய முடிந்ததாக குறிப்பிட்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் அன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால் தான் இன்றைய பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் சுமார் 107 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

பெண் கவிஞர்களின் தோற்றத்தில் அவர்களின் இளவயது திருமணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. கணவன் இறந்த பின் அப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு கல்வி கற்பித்தலை ஊக்குவித்ததால் அப்பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ந்தனர். பின் சமூகத்தின் மீதான அவர்களின் பார்வை அகல விரியவே அவர்கள் கவிஞர்களாக மாறினர்.

விழுப்புரம் அகலாம்பிகை என்ற பெண் சிறுவயதிலேயே விதவையானவர். பின் இரட்டணை என்ற ஊரில் தங்கியிருந்து ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யாப்பு நயம்பட பல்வேறு கவிதைகளை வெளியிட்டார். இவரின் சிறப்புக்குரிய படைப்பாக மகாத்மா காந்தி தொடர்பாக இவர் எழுதிய ஏழு காண்டங்களை கொண்ட நுால் விளங்குகின்றது.
பத்மாவதி, கிருஸ்ணவேணி ஆகிய சகோதரிகள் கும்மியடிக்கும் பெண்களாக விளங்கினர். இவர்களிடம் இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற இசை அறிவின் காரணமாக இவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் இசயோடு இணைந்து காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண பெண்ணாகிய சம்பூர்ணம் என்பவர் சமையல் செய்து கொண்டே தமயந்தி நாடகம் தொடர்பாக கவிதைகளை எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வை.மு.கோதைநாயகி

இவ்வாறாக பெண்கள் கவித்துறையில் சாதித்தது மட்டுமன்றி பல பெண்கள் இன்றும் ஊடக துறையில் சாதித்த வண்ணம் உள்ளனர். தமிழ் மொழியே தெரியாத வை.மு.கோதைநாயகி என்ற பெண் கணவரின் துணையோடு நின்று 15 நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த ஜெகன்மோகினி பத்திரிகையின் ஸ்தாபகராகவும் இப்பெண் விளங்கியுள்ளார். அத்துடன் பல பெண்கள் நாடு கடந்து சென்றும் பத்திரிகை துறையில் செயற்பட்டிருக்கின்றனர். இன்றைய தமிழ் பெண் பத்திரிகையாளர்களின் கதாநாயகிகளில் முக்கியமானவர் இலங்கையின் மலையத்தில் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக கணவருடன் இணைந்து போரிட்ட மீனாட்சியம்மாள் நடேசையர் அவர்கள்.
மீனாட்சியம்மாள் நடேசையர்

இந்திய வம்சாவளி மக்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்திரிகைகள் ஊடாக குரலெழுப்பி வந்த நடேசையர் அவர்களை ஆங்கில அரசு தடை செய்த போது அங்கிருந்து இலங்கை வந்து மலையக வாழ் இந்திய மக்களுடன் இணைந்து வாழ்ந்து அவர்களுக்கான உரிமைகளை தேடியறிந்து அதனை பெற்றுத்தருவதற்காக பத்திரிகைகளை உருவாக்கினார். கணவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இங்கு பெண்களுக்கான உரிமை போரிலும், மக்களின் விடுதலை போரிலும் தன்னையும் இணைத்து கவிதைகளை எழுதியதுடன் வீடு வீடாக சென்று பாரதியார் பாடல்களை பாடி புரட்சி தீயினை வளர்த்தார். இவர் மாறுவேடம் பூண்டு நடாத்திய பத்திரிகைகள் தேச நேசன், தேச பக்தன், உரிமைப்போர், தொழிலாளி, சுதந்திர போர் என்பனவாகும்.

நன்றி இணையம் www.fashioner.com

இவர்களின் வழித்தோன்றல்களாக இன்றைய பெண் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சவால் மிக்க இன்றைய ஊடக துறையில் இவர்களின் பணி மெச்சத்தக்கது. இன்றைய நாளில் பெண் ஊடகவியலாளர்கள் சாதிப்பதை விட சவால்களையே அதிகம் சந்திக்கின்றனர். பாலியல் ரீதியான அழுத்தங்கள், ஆணாதிக்கம் என்பன இவர்களை கட்டுப்படுத்தும் காரணிகளில் முதன்மை பெறுகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் தமக்கான பாதுகாப்பு வேலிகளாக கொண்டு இத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை நாம் பாராட்டியேயாக வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமன்றி மேன்மையானவர்கள் அதனை நாம் உணர வேண்டும். மோசமான படைப்புகள் பல பெண்களின் புனை பெயர்களின் வெளிவரும் இன்றைய சவால் மிகுந்த காலத்தில் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பெண்கள் இலக்கிய படைப்பாற்றலிலும், ஊடகத்துறையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாகவும் அமைகின்றது.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Tuesday, January 3, 2012

கயத்தாறு நோக்கிய பயணம்..- கட்டபொம்மனின் இறுதி நாட்கள் - 1

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே..
தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ஆரம்பிக்கின்றேன். இப்பதிவு ஒரு தொடர்பதிவு. இதன் தொடர்ச்சியான பாகங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொண்டு பதிவை ஆரம்பிக்கின்றேன்.

வியாபார நோக்கத்திற்காக ஆரம்பத்தில் இந்திய உபகண்டத்தினுள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்நாளில் மண்ணாதிக்க வெறிக்கு உட்பட்டனர் காரணம் மண்ணில் இருந்த வளமும், வீரமும் அவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுதான். அந்த வகையில் இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தென்னாட்டில் உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து முகஸ்துதி செய்து திறை செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டனர். அவர்களின் மிரட்டலுக்கும் படை பலத்திற்கும் பயந்து பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர். பலர் மண்டியிட்டனர்.
சிலர்தான் “தாம் உயிர் நீக்க நேரினும் வரிசெலுத்த முடியாது” என்று கூறினர். ஆங்கிலேயரையும் எதிர்த்து நின்றனர். அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவரின் அனல் தெறிக்கும் கோபத்தினை கண்ட ஆங்கிலேயர்கள் தமது நில ஆதிக்கத்திற்கு இவர் தடையாக அமைந்து விடுவார் என்பதை உணர்ந்தனர். போரின் மூலம் அவரை அடக்க எண்ணி யுத்தத்திற்கு தயாராகினர்.

மேஜர் ஜோன் பானர்மன் என்ற ஆங்கில தளபதி தனது பிரமாண்டமான கம்பனிப் படையுடன் 1799 செப்டம்பர் 04ம் திகதி பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு சிவலப்பேரி மார்க்கமாக பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தார்.
இந்நேரத்தில் ஏக காலத்தில் கப்டன் ஓ ரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற இதர ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி தங்களது படைகளுடன் போருக்கான வேகத்துடன் நின்றனர்.
ஜோன் பானர்மனின் படை 05.09.1799 காலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் வந்த இராணுவ வீரர்களும் ஆங்கிலேய படையுடன் இணைந்து கொண்டனர்.

இந்நேரத்தில் வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் மறத்தமிழர் படையும் தயாரானது. கட்டபொம்மனின் படையில் சிவத்தையா நாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திரபிள்ளை, சம்பரதி பொன்னப்ப பிள்ளை, ஃபாதர் வெள்ளை எனப்படும் வீரன் வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாத ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம் இவர்களுடன் பலர் உள்ளடங்கியிருந்தனர் .
போருக்கான ஆயத்தங்கள் இருபக்கமும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் நோட்டமிடும் நோக்கில் அதாவது கட்டபொம்மனின் யுத்த ஏற்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு வழிமுறையை பின்பற்றினர். அதுதான் துாது அனுப்பியது.
மேஜர் ஜோன் பானர்மன் தம்முடைய படையோடு இருந்த ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் துாதுவராக அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்துகட்டபொம்மன் உடனடியாக பானர்மன்னைச் சந்திக்கவும்” என்ற செய்தியை தெரிவித்தனர்.
அதற்கு கட்டபொம்மன் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.
எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்தரவு வந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப் பார்க்க முடியாது” என்பதாகும்.


"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
 அரசின் செயலாளரான அப்போது இருந்த ஜோசையா வெப்பிற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜோன் பானர்மென் 05.09.1799 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகளே அவை..

பெயரளவில் நடந்த சமரச முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலேயருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை என்பது ஆங்கிலேயர்களுக்கு மேலும் உறுதிபடத் தெளிவானது.

அடுத்த கட்டமாக போர்தான் தீர்வு என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். காலத்தால் அழியாத, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் ஆரம்பமானது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தெற்குக் கோட்டை வாசலும், வடக்குக் கோட்டை வாசலும் ஆங்கிலேய படையினரால் முதலில் தாக்கப்பட்டது. இந்த முதற்கட்ட போரில் ஆங்கிலேய படையின்  நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர். இருப்பினும் போர் தீவிமாக நடைபெற்றது. ஆங்கிலேய படையின் பீரங்கிகள் செயற்பட தொடங்கின.., அவை கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெறியத் தலைப்பட்டன.
இதனால் கோட்டையை இழந்து விடுவோமோ என்ற நிலையில் தீவிர ஆலோசனையை உடனடியாக மேற்கொண்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இறுதியில் திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்று விட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை நோக்கி விரைந்து சென்றார்.

மறுநாள் முழுவதும் கோட்டையில் இருந்த படைகளுடன் இடம்பெற்ற கடுமையான போரினை தொடர்ந்து 09.09.1799 காலை 09.30 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட அவர் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்களின் ஊடாக கட்டளையிட்டார்.
அந்த கடிதம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தன்மையை மேலும் பறை சாற்றி நிற்கிறது எனலாம். 
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம் எழுதியதாக அவரே அரசுக்கு 11.09.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegar, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.

கடிதங்களின் மூலமாக கட்டளைகளை பிறப்பித்த பின் ஆங்கிலேய படைகள் கட்டபொம்மனை தேடுவதற்கு தயாராகின. லெப்டினென் டக்ளஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், கப்டன் ஓ ரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்வதும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும் படியும் ஆங்கிலேயருக்கு தகவல் தந்தார். உற்சாகமடைந்த பானர்மென், குறிப்பிட்ட அளவு படைவீரர்களுடன் கப்டன் ஓ ரெய்லியையும் லெப்டினென் டக்ளஸையும் எட்டயபுரம் படையினருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டயபுரத்தாரின் படைகள் கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எதிர்கொண்டன. இச்சம்பவம் 10.09.1799 அன்று நடைபெற்றது. இரண்டு தமிழர் படைகளுக்குமிடையில் போர் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். போரின் முடிவில் ஆறு வீரர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரது தம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை ஆங்கிலப் படையினர் அப்போரின் போது கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்று எட்டயபுரம் செய்த அந்த துரோகத்திற்கும், பாவத்திற்கு பரிகாரமாகவே ஆங்கிலேயரை எதிர்க்க பின்நாளில் பாரதியார் அதே மண்ணில் தோன்றினார் என்று பலர் இன்று கருதுகின்றனர்..!)

சரி நண்பர்களே..
இந்த வரலாற்று பயணத்தின் அடுத்த பாகத்தினை எதிர்வரும் வாரத்தில் தருகின்றேன்.
அதற்கிடையில் மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன்.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,



Continue reading →
Sunday, January 1, 2012

2012ல் எனக்கு முதலிடம்

4 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..,

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த 2012 புதிய ஆண்டின் முதல் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இன்றைய 01.01.2012 ம் திகதி நிறைவடைய சில மணித்தியாலங்களே உள்ளன. இந் நேரத்தில் இவ்வாண்டின் முதல் நாளான இன்று முதன் முதலாக கிடைத்த என் சார்ந்த விடயங்களை இப்பதிவு கொண்டு வருகின்றது.
நான் பெற்ற விடயங்கள், கொடுத்த விடயங்கள் என பல விடயங்களை பதிவை தொடர்ந்து படிப்பதன் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


முதல் வாழ்த்து - தொலைபேசியில் சரியாக நள்ளிரவு 12.00 க்கு கிடைத்தது.

முதலில் சந்தித்த நபர் - என் அப்பா தொடர்ந்து அம்மா

முதல் வணக்கம் - சூரிய பகவானுக்கு

முதல் பானம் - TEA

முதல் உணவு - பிட்டு

முதல் பணி - நாட்காட்டி மாற்றியது

முதலில் சந்தித்த நண்பன் - தன்சயன்

முதல் திட்டமிடல்
                                    எதையும் அந்தந்த நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும். தருணங்கள் எமக்காக காத்திருக்காது. கிடைக்கும் தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதல் நிகழ்ச்சி - 2011ன் கனவு கன்னி யார்?

முதலில் பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் - சன் டிவியின் அடம்ஸ்

முதலில் கேட்ட வானொலி நிகழ்ச்சி -
                                                             வெற்றியில் மொக்கை சபா.
இணையத்தில் வானொலியை கேட்க ஆரம்பிக்கையில் “2012 உங்கள் வெற்றி என்றும் உங்களுடன்.. இனிய புதுவருட வாழ்த்துகள்.” என்ற குரல் பதிவு லோஷன் அண்ணாவின் குரலில் கேட்க கிடைத்தது.

முதல் செய்தி - வடக்குக்கான புகையிரத பாதை புனரமைப்பு ஜனவரி 18ல் ஆரம்பம்

முதல் முகப்புத்தக பதிவு -

முதல் கருத்து பகிர்வு -

முதல் படம் - கந்தசாமி, நானாக விரும்பி பார்த்தது Ra 1

முதல் திரைத்துறை செய்தி - நண்பன் திரைப்படம் ஜனவரி 12ல் ரிலீஸ்

முதல் கவிதை -
                               நா.முத்துக்குமார் நண்பன் இசை வெளியீட்டு நிகழ்வில் வைத்து தெரிவித்த நட்பு தொடர்பான கவிதை.
இறைவன் இரண்டாவது தாயை படைக்க விரும்பி
 மண்ணிற்கு அனுப்பிய இன்ப துன்பத்தில் இணைந்திருக்கும் 
உறவு நட்பு...

முதல் அதிர்ச்சி - ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் புவிநடுக்கம்

எதிர்பாராத முதல் வாழ்த்து - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்த்து

முதல் பாடல் (VIDEO) - ஆஹா ஆனந்தம்..- அற்புதம் திரைப்பட பாடல்



முதல் பாடல் (AUDIO) - ALL IS WELL.. - நண்பன்

எதிர்பார்த்த வாழ்த்து -
                                         லண்டனில் இருக்கும் என் நண்பன் ஒருவனின் வாழ்த்து. ஆனால் அது கிடைக்காமல் போனது வருத்தம்

சரி இப்படியாக இந்த வருடத்தின் முதல் நாளில் என்னோடு வந்து சேர்ந்த முதல் விடயங்களை பகிர்ந்து கொண்டேன். இது போல பல விடயங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும். அவை மகிழ்ச்சிகள் பலவற்றை தந்திருக்கும். அந்த மகிழ்ச்சிகளுடன் 2012ல் தொடர்ந்து பயணிப்போம்.
நாளைய பொழுதும் நல்லதாகவே அமையும்..

சரி நண்பர்களே.., இவ்வருடத்தின் என் முதல் துாக்கத்திற்கு செல்லவுள்ளேன்.




நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Photobucket