எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, July 18, 2011

கவியரங்கில் பதிவர்கள்..!

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்று (16.07.2011) இடம்பெற்றது. திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற்ற பரத நடன நிகழ்வுகள், தவில் கச்சேரி, வில்லுப்பாட்டு ஆகியவற்றுடன் முத்தாய்ப்பாக அமைந்தது கவியரங்கம்.

கவிஞர்கள் உருவாக்கப்படுபவர்கள். அவர்களின் வாழ்க்கை சூழல், அனுபவித்த, அனுபவிக்கும் நிகழ்வுகளின் தாக்கம், மாறுபட்டதும் புரட்சியானதுமான சிந்தனைகள் கவிஞர்களை உருவாக்கி விடுகின்றன. அவ்வாறே பதிவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்த பதிவர்கள் கவியுலகிலும் நுழைந்தனர். பதிவுகளில் கவிதைகளில் கலக்கி எம்மை கட்டிப்போட்ட கவிச்சக்கரவர்த்திகள் இணைந்து வழங்கிய கவியரங்கம் பற்றிய தகவல்களுடன் இப்பதிவு உங்களுடன்..
இரவு பத்து மணியளவில் அழகிய இரவில் மரங்களால் சூழ்ந்திருந்த ஆலய முன்றலில் கவியரங்கம் ஆரம்பித்தது கவியரங்க தலைவர் லோஷன் அவர்களின் “அனைவருக்கும் வணக்கம்” என்ற வார்த்தையோடு..

தலைநகரில் இருந்தாலும் தாய்மடியை நீங்கி தவித்திருந்தோம்.. ஆனால் தமிழ் என்ற பாலம் எப்போதும் எமை இணைப்பதால் இப்போது சந்திக்கின்றோம்.. என யாழ் மண்ணை தாய்மண்ணாக கொண்டுள்ள கவிஞர்கள் சார்பில் கவித்தமிழ் மொழியால் கவியரங்கத்தை ஆரம்பித்து வைத்த லோஷன் அவர்கள், தொடர்ந்து கவித்தலைப்பை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்த அறிமுகத்தை சற்று கேட்டு பாருங்கள்..



அழகான தமிழால் ஆண்டாண்டு காலமாக எம்மை அள்ளி அரவணைத்து அணையாத தாகத்தையும் நெஞ்சில் உரத்தையும் நேர்மை சிரத்தையையும் தந்து நிற்கும் மறைந்தும் மறையா கவி மகாகவி பாரதியே இன்று எங்கள் தலைவன்.. இன்றைய கவியரங்க தலைப்பு மறுபடியும் பாரதி.

ஓடி விளையாடும் பாப்பா முதல் உலகை ஆளும் மகாசக்தி வரை தன் பாட்டு உலகத்திலே அள்ளி அடக்கிய பாரதியின் தேடி எடுத்த நான்கு வரிகளை கவித்தலைப்பாக கொண்டு கவிதைகளை சபையேற்றினர் பதிவுலக கவிஞர்கள். அவ்வகையில் பப்புமுத்து என புகழ் பெற்ற சின்ன வைரமுத்து நித்தியானந்தன் பவானந்தன் அவர்கள் வல்லமை தாராயோ.. என்ற தலைப்பிலும்,

தகவல் தொழில்நுட்பவியலாளரும் பதிவுலகில் சுவடிகளை எழுதி வருபவருமான மாலவன் அவர்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே.. என்ற கவித்தலைப்பிலும்,

பொறியியல் தேர்ச்சியாளர் சிறுகதை புகழ் சுபாங்கன் அவர்கள் ஜெயமுண்டு பயமில்லை மனமே.. என்ற பாரதியின் வரியை துளியளவும் பயமின்றி கவித்தலைப்பாக மாற்றிக்கொண்டும்,

அற்புதமாகவும் அழகாகவும் அடக்கமாகவும் கவிதைகளை படைத்துவரும் ஆதிரை என்ற அரியகுமார் சிறீகரன் அவர்கள் தன் வருங்காலத்துக்காக கண்ணம்மாவை காற்று வெளியில் காதலித்த பாரதியின் வரிகளில் இருந்து காதல் போயின் சாதல் என்ற தலைப்பை தெரிந்து கொண்டும் தத்தம் கவிதைகளை அரங்கேற்றினர்.

முதலில் திருமலை நண்பன் பவன் கவிதை பாட ஆரம்பித்தார்.


பாரதியிடம் அனுமதி கேட்டு பின் கவிதை உரைக்க ஆரம்பித்தார் பவன்.


சுரண்டல்கள் இன்றி பதுக்கல்கள் இன்றி
தணிக்கைகள் அன்றி தாமதம் இன்றி
தயக்கங்கள் இன்றி தடைகளுமின்றி –மடலொன்று வரைய
அது மாற்றங்கள் இன்றி உனை வந்தடைய மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ


என்று தொடர்ந்து சென்ற அவரின் கவிதையில் சிறுபகுதி..



கவியுரைத்து சென்ற பவன் குறித்து கவியரங்க தலைவர் லோஷன் அண்ணா அவர்கள் கூறிய வார்த்தைகள் அற்புதம்.. ரசித்தேன்…


வாலிப வயதில் வனிதையருக்கு மடல் வரையும் பருவத்தில் வாழும் வயதில் வானகம் சென்ற பாரதியிடம் வல்லமை வேண்டி பவன் கவிதை பாடிய வேளையில் அவர் வயதொத்த பாவையர் பலர் ரசித்திருந்தனர் என்பது உதிரித் தகவல்.. அவர்கள் ரசித்தது கவிதையையோ?? பவனையோ?? யாமறியோம்…!

பவனை தொடர்ந்து கணனியின் காவலன், IT அரிச்சுவடி, மாலவன் அண்ணா அவர்களின் கவிதை இடம்பெற்றது.

மனதில் தேங்கியிருந்த பலவற்றினை நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் கவிதை வடிவில் அழகாக படைத்திருந்தார் மாலவன் அண்ணா.


இயற்கை அழகுடனும், நகைச்சுவையுடனும் ஆரம்பித்த அவரின் கவிதையில் சூரியனக்கு முன் எழுந்து ஊர் உறங்கிய பின் உறங்கும் இளைஞர்களின் ஆதங்கங்கள் பரவிக்கிடந்தன. அத்துடன் இன்றைய சமூகத்தின் திருமண சந்தை குறித்தும் சாடியிருந்தார் மாலவன் அண்ணா


பலத்த கரகோஷங்களுடன் தொடர்ந்த இவரின் கவிதையில் எனக்கு பிடித்த வரி ஒன்று உள்ளது.. வடக்கின்... 
மீதியை அவரின் பதிவில் பாருங்களேன்..

தொடர்ந்து ஜெயமுண்டு பயமில்லை மனமே என்ற காலனை காலால் உதைத்த பாரதியின் வரியில் அமைந்த கவித்தலைப்பில் கவிபாடினார் சுபாங்கன் அவர்கள்.


பாரதியுடன் உரையாடினால் எப்படி இருக்கும்..? என்ற வடிவத்தில் சம்பாசணை முறையில் கவி பாடிய சுபாங்கன் அட்டகாசமான வரிகள் பலவற்றையும் இடமறிந்து பயன்படுத்தியிருந்தார். நீங்கள் தான் கவிஞர்களாக இருந்தால் கசியும் மௌனத்தில் இருந்து கண்டு பிடித்து கொள்ளுங்கள் அவற்றை..

“நீர் போல் மாறு.. பாத்திரத்தின் வடிவம் படிக்கப்பழகு..
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டு விட்டு அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு..” என்ற வரிகள் ரசிக்க வைத்தன..

சுபாங்கனை தொடர்ந்து காதலை கவிப்பொருளாக கொண்ட ஆதிரை அண்ணா அவர்களின் காதல் போயின் சாதல் என்ற கவிதை கவியரங்கில் இடம்பெற்றது.


“காதலை பாடுவது கூட ஒரு வகையில் சாதல் தானே” என்று அழகாக ஆரம்பித்த அவரின் கவிதைகள் காமம் கடந்து நின்றன.


“ஞாபகம் இருக்கிறதா..?? நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ குனிய.. இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திலேதான் ஒரு காவியம் ஆரம்பமான கதை..” என்ற வரிகள் அங்கிருந்தவர்களின் கரகோஷங்கள், விசில் சத்தங்களை கடந்து ஒலித்து நின்றது.




இவரின் கவிதையில் “உடல் பாடையில் போகும் போதும் கூட உண்மைக்காதல் சாவதில்லை..” என்ற வரி என்னை கவர்ந்து நின்றது..


தன் மனதில் காதல் நிரப்பி அதை தமிழால் தொட்டு தாளில் கவிதையாக்கி காதல் பாடி நின்ற ஆதிரை அண்ணாவிற்கு முற்கூட்டிய வாழ்த்துகள்..

பாரதியை அந்தக்கால கவிஞன் என்று யாரும் சொல்ல முடியாத காரணத்தை உணர்த்தி நின்ற இக் கவியரங்கம் இன்றைய நிலையில் நம்மவர்களின் ஆதங்கங்களுடனும் ஏக்கங்களையும் சந்தேகங்களையும் மிகச்சிறப்பாகவும் சூட்சுமமாகவும் வெளிப்படுத்தி நின்றது என்பதே தமிழன்னையின் மனதில் தோன்றி நிற்கும் பாராட்டுக் கருத்தாகும்.


இந்த அருமையான கவியரங்கத்தை நேரில் காணும் வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்த இறைவனுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள். அத்துடன் அடிக்கடி என் வரவை உறுதி செய்த பவனுக்கும் கோடி நன்றிகள்..


இளைய லோஷன் ஹர்ஸுவின் குறும்புகள் ரசிக்க வைத்தன.. தந்தைக்காக மாலவன் அண்ணாவுடன் செய்த குறும்பு சண்டை அபாரம்..


நள்ளிரவு கடந்தும் என்னுடன் சில நிமிடங்களை செலவிட்ட சுபாங்கன் அண்ணா, ஆதிரை அண்ணா, மாலவன் அண்ணா ஆகியோருக்கும் என் அன்பின் அண்ணா லோஷன் அண்ணா குடும்பத்தினருக்கும் என் நன்றிகள்..


நன்றி
மீண்டும் சந்திப்போம்..,
என்றென்றும் அன்புடன்..,
Continue reading →
Tuesday, July 12, 2011

கவிதையும் கவிதை சார்ந்த இடமும்…வைரமுத்து

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
கடலில்தான் முத்து கிடைக்குமாம்..! ஆனால் மழை வேண்டி வானம் பார்த்திருக்கும் தேனி மாவட்டத்திலும் ஒரு முத்து கிடைத்தது. ஆம் இரு விலையுயர்ந்த கற்கள் ஒன்றாக சேர்ந்து வடுகபட்டியில் வைரமுத்தானது. பாரதிக்கு பின் தமிழை நேசித்த கவிஞனும் இவரே, தமிழ் நேசித்த கவிஞரும் இவரே..


அவரின் சமூகச் சூழல், வாழ்க்கை கோலம், சிந்திய வியர்வை,ரத்தம் என்பன சேர்ந்து ஒரு கவிஞனாக இவரை மாற்றிப்போட்டது. தமிழ் கவிதை உலகிலே தன் பத்தொன்பதாவது வயதில் “வைகறை மேகங்கள்” ஊடாக கால்பதித்தார். தொடர்ந்து இவர் எழுதிய “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” இவரின் வாழ்க்கை பாதையையே திருப்பிப் போட்டது எனலாம். ஆம், இந்த கவிதை நுால் தான் வைரமுத்துவை பாரதிராஜாவுக்கு அடையாளம் காட்டி நின்றது. பாரதிராஜா 1980ல் தயாரித்த நிழல்கள் திரைப்படத்தில் கன்னிப்பாடல் எழுதினார் வைரமுத்து. இப்பாடலை எழுதிய போதுதான் அவருக்கு முதல் மகன் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று எழுத ஆரம்பித்த இவரது பேனா இன்று 60000 பாடல்களை கடந்தும் எழுதிக்கொண்டே இருக்கின்றது.. தொடர்ந்தும் எழுதும்.

தமிழ் மொழியை உலகளவில் கொண்டு செல்வதில் இவரின் கவிவரிகளுக்கும் முக்கிய இடமுண்டு. பூங்காற்று திரும்புமா என்ற கேள்வியில்  தேசிய விருது என்ற முதல் மரியாதையை பெற்றுக்கொண்ட கவிபேரரசு தொடர்ந்து சின்ன சின்ன ஆசைகளை முதல் முறை கிள்ளிப்பார்த்து போறாளே பொன்னுத்தாயி என தெய்வம் தந்த பூவாகிய கள்ளிக்காட்டில் பொறந்த தாயை தன் அன்பில் ஊறிய தமிழில் பாட மீண்டும் மீண்டும் என 6 தடவைகள் தேசிய விருதுகள் இவரை கௌரவித்தன…இல்லை இவரால் கௌரவிக்கப்பட்டன.

இன்றைய பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு அவர்களுக்கு நான் எழுதும் இந்த வாழ்த்துப்பதிவு சற்று வித்தியாசமானது. இவரின் பாடல்களை மட்டும் இப்பதிவு பாடி நிற்கப்போவதில்லை. இவரின் கவிதைகள், இவருக்கான கௌரவங்கள் என்பவற்றையும் பேசி நிற்கவுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறை கடக்க இருக்கும் இவரின் பாடல்கள் பல்வேறுபட்ட மாற்றங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. 35 வருடங்களில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்கள் இவரின் கவிதைகளுக்கும் மாற்றங்கள் கொடுத்தன. ஆனால் இவரை திரையுலகில் இருந்து மாற்றவில்லை. ஏனெனில் இவரின்றி எங்கே தமிழ் பாடல்களை படைப்பது..?

58வது வயதில் கால் பதிக்கும் இவரிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் அவரின் பதில் இப்படி இருக்கும்.. 
“58 என்று என் ஜாதகம் சொல்லுகிறது.. ஆனால் 28 தெரிகிறது என்று உடல் சொல்லுகிறது. ஆனால் 18ல் இருப்பதாக மனசு சொல்லுகிறது..” என்பார்.

உண்மைதான் மனது 18 வயதில் இருந்தால் தான் காதல் கவிதைகள் கற்பனைகளை கிழித்துக்கொண்டு வரும். இவரும் ஒரு காதலன் தான். தன் அன்பு மனையாளான பொன்மணி வைரமுத்து அவர்களை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கபிலன், மதன் கார்க்கி என இரு பெயர் சொல்லும் புதல்வர்கள்.

இன்று வரை கவிஞர் அவர்கள் 14 கவிதை தொகுப்புகளை படைத்துள்ளார். அவையாவன,
  • வைகறை மேகங்கள்,
  • சிகரங்களை நோக்கி..,
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்,
  • தமிழுக்கு நிறமுண்டு,
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்,
  • இதனால் சகலமானவர்களுக்கும்,
  • இதுவரை நான்,
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்,
  • பெய்யென பெய்யும் ழை,
  • நேற்று போட்ட கோலம்,
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்,
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்


அத்துடன் 5 நாவல்கள் இவரின் சிந்தனையில் இருந்து வெளிவந்துள்ளன. (தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்)

மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதைக்குள் நுளைந்த தமிழ் கவியுலகிற்கு கிடைத்த அறிவுப்பொக்கிஸம் இவர்.
இலக்கண தமிழ் மட்டும் இவரின் கவிதைகளை அலங்கரிக்கவில்லை.. பேச்சுத்தமிழும், வட்டாரத்தமிழும், அறிவியல் தமிழும் ஏன் மழலை தமிழும் இவரின் கவிதைகளுக்குள் அகப்படாமல் வளர்ந்ததில்லை. அதற்கு ஒரு உதாரணம்.

தமிழ் மீது இவருக்கு அடங்காத காதல். எந்த கவிதையில், எந்த பாடலில் இவர் தமிழ் பற்றி சொல்லவில்லை என்றால் அது சாத்தியமில்லை. தமிழ் பற்றிய இவரின் பாடல்களில் என்னைக் கவர்ந்தது டுயட் திரைப்படத்தின் 'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…' என்ற பாடலாகும்

இவரின் ஒரு கவிஞன் என்ற கவிதையை படித்துப்பாருங்கள்.. கவிஞனின் உண்மை நிலை தெரியும்.

உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்

கண்ணில் மழைகட்டும் போதெல்லாம்
பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான்
ஆயினும் - பரிகாசமே பரிசாய்ப் பெறுவான்.

காலக்கண்ணாடி என்பான் தன்னை
ஒருபயலும் அதில் முகம்பார்த்ததில்லை

கடல்கடக்கும் பறவைகாள்!
சிறகுவலித்தால் எங்கே
சிரமபரிகாரம் என்பான்

சுற்றும் பூமி நின்றுவிடில்
சூழ்காற்று எங்குறையும் எனவியப்பான்

சமூகம் அவனைவிட்டுப்
பத்தடி தள்ளியே பயணித்தது

உறைந்துகிடக்கும் நிலாவெளிச்சமென்று
பனித்துளிகள் பார்த்து இமைதொலைப்பான்

அவனுக்கு
நாட்டுவைத்தியமே
நல்லதென்றாள் பாட்டி

கோடுகளற்ற நாடுகள்
வேலிகளற்ற வீடுகள்
வறுமைகளைந்த வாழ்வு
கண்ணீர் கழிந்த சமூகம்

ஊர்மேடையேறி உரக்கப்பாடுவான்
குல்லாய் தொலைத்த கோமாளியென்றது கூட்டம்

பெயர்கள் கூட
ஜாதிமத அடையாளம் காட்டுமாதலால்
எல்லார்க்கும் பெயர்களைந்து
எண்களிடச் சொல்வான்
அவனை மனிதப்பிரஷ்டம் செய்யச் சொன்னது மதம்

சில்லறைகள் ஓசையிடும்
சமூகச் சந்தையில்
அடங்கிபோனது அனாதைப்புல்லாங்குழல்

பொறுத்த கவி ஒருநாள்
பொறுமை துறந்தான்
தன் கவிதைகளை
நெற்றியில் எழுதி
ஒட்டிக்கொண்டான்

கூட்டத்தை ஊடறுத்துக்
கவிபாடிக் கலைத்தான்
ஊசியின் காதோடும்
ஒப்பித்தான் கவிதைகளை
தெருக்கள் வெறிச்சோடின

ஒரு கையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் கவிதையேந்தி
நிர்வாணமாக ஊர்வலம் போனான்
கண்கள் - கதவுகள் அடைத்துக்கொண்டன

தாஜ்மகால் சுவரில்
தார் எழுதினான்
காலையில் கைதாகி
மாலையில் விடுதலையானான்

ஒருநாள்...
பறவைகள் எச்சமிடும்
கோயில் கோபுரமேறி...
கலசம் உருகக் கவிதை கூவினான்

நிர்வாகம் அவனை
இறங்கும்வரை கெஞ்சியது
இறங்கியதும் கிழித்தது

நேற்று...
தன் முதற்கவிதை வெளிவந்த பத்திரிகையின்
முதற்பிரதி கொள்ள
உயிர்பிதுங்கும் பரபரப்பில்
ஓடிக் கடந்ததில் -
சாலை விபத்தில் செத்துப்போனான்

மொத்த ஊரும் திரும்பிப் பார்த்து
மரித்துப் போயினன்
.............................................................................................

வைரமுத்துவிற்கு வாழ்க்கையை படிக்கத் தெரியும்,ரசிக்கத் தெரியும், வாழவும் தெரியும். அதனை அவரே உணர்த்துகின்றார் இங்கு..


பாங்கொங்,கனடா,கொங்கொங் ஆகிய நாடுகளில் தமிழ் கற்பிக்கும் பள்ளி அமைத்து தமிழ் வளர்த்து வரும் கவிஞர் அவர்களுக்கு 1986ல் கவிப்பேரரசு என்ற விருதுப்பெயர் கிடைத்தது. 2003ல் பத்மஹீ விருது கிடைத்தது. இவரின் கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ல் சாகித்ய அக்கடமி விருதையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.
தன் வாழ்க்கை வரலாற்றை 28வது வயதிலேயே எழுதிய ஒரே கவிஞர் இவர்தான். இதுவரை நான் என்பது தான் அவரின் சுயசரிதை. இந்நுாலை மின்னுாலாக பெற இங்கு செல்லவும்.

'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் கரைகளில் தாடி வளர்த்தவாறு, கானல் நீரில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் என சமகால இளைஞர்களின் மனதிலெல்லாம் நம்பிக்கை நாற்றுகளை நடத்தான். தன் முதுகில் ஒரு லட்சியக் குடத்தைச் சுமந்து கொண்டு இந்த நத்தை நகர்ந்தது எப்படி என்பதைச் சோர்ந்து கிடப்பவர்களுக்குச் சொல்லத்தான். நீர் பசையில்லாத பாறைகளின் இடுக்கில் முளைத்த இந்தக் கறுப்பு விதை கிளைகளை மேலே விரிப்பதற்காகச் சூரியனோடு நடத்தி போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும் இளைய தமிழனுக்குள் ஒரு சுயநம்பிக்கையைச் சுரக்க வைக்க வேண்டும். 

ஒரு கவிஞனிடம் மாறுபட்ட எண்ணங்கள் பரவிக்கிடக்கும். எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவனே கவிஞன். அதற்கு விதிவிலக்கல்ல நம்ம கவிபேரரசு. அவர் எழுதிய ஒரு மாறுதலுக்காக என்ற கவிதை அதற்கொரு சான்று.


ஒரேமாதிரி சுற்றும் பூமி 
ஒரேமாதிரி வீசும் காற்று 
ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் 
ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை 

மழையும் வழக்கம்போல் 
மேலிருந்து கீழாய் 

தேதிபார்த்து வந்து 
தேதிபார்த்துப் போகும் 
வசந்தம் 

ஒரேமாதிரி உணவு 
ஒரேமாதிரி துாக்கம் 
ஒரேமாதிரி கனவு 

எப்படித்தான் நூறாண்டு 
இருப்பதோ இம்மாநிலத்தே? 

வாழ்முறை சற்றே 
மாற்றுக மனிதரீர் 

வாரத்தில் ஒர்நாள் 
பகலெல்லாம் தூங்கி 
இரவெல்லாம் விழிமின் 

பகல் 
பிறர்க்காக நீவிர்வாழ 
இரவு 
உமக்காக நீவிர்வாழ 

வானஇலை விரித்து 
நட்சத்திரம் தெளித்து 
நிலாச்சோறு பரிமாறுமியற்கை 

அருந்தாமல் தூங்கும் 
பசியோடு மனிதகுலம் 

இரவெல்லாம் விழிமின் 
நட்சத்திரம் முணுமுணுக்கும் 
ஓசைகள் காதுற்றால் 
நல்ல செவியுமக்கு 

ஒரு கண்ணாடித்துண்டு கொண்டு 
நிலவைச் சிறையெடுமின் 

கண்-காது-இருதயம் 
துருப்பிடிக்குமுன் துலக்குவீர் 

வானத்தின் நீளஅகலம் தெரியுமா? 

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகைப் 
பேட்டி காண்பீர் 

வயதாக ஆக 
வாழ்வோடு ஏன் விவாகரத்து? 
நெருங்கி வாருங்கள் 

குழந்தையோடு கூடி விளையாடித் 
திட்டமிட்டுத் தோற்றுப் போங்கள் 

கண்ணிரண்டும் மூடித் 
தொலைபேசி சுழற்றுங்கள் 

எதிர்முனையில் எவர் வரினும் 
அன்றைய விருந்துக்கழையுங்கள் 

வீட்டுப்பிள்ளையர்க்கு விடுமுறைவிட்டு 
நீங்கள் ஒருநாள் பள்ளிசெல்லுங்கள் 
இரண்டு புரியும் உமக்கு 
ஒன்று : உங்கள் அறியாமை 
இரண்டு : பிள்ளையர் பெருமை 

உடைந்தமேகம் முத்துநீர் சிதறினால் 
ஓடுங்கள் ஓடுங்கள் 
எங்கே மழையின் கடைசித்துளியோ 
அங்கே நில்லுங்கள் 

மழைக்கு வெளியே நின்று 
மழையை ரசியுங்கள் 
மழைபெய்த களிமண் நிலமாய் 
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும் 

பணம் கிடந்தால் மட்டுமல்ல- 
ஓடும்பேருந்தில் ஏறும் பெண்ணின் 
கூந்தல் பூஉதிர்ந்தாலும் 
காவல்நிலையம் ஒப்படையுங்கள் 

மரணம்கூட வித்தியாசமாயிருக்கட்டும் 
அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும்

..............................................................................................

வைரமுத்து அவர்களுக்கு தாய் என்றால் தனிப்பிரியம். தன்னை சுமந்து பெற்ற தாய் பற்றி அவர் எழுதிய கவிதைகள், பாடல்கள் ஏராளம் ஏராளம்.. அதில் என்னை மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் ஒரு பாடல்.. ஆயிரம் தான் கவி சொன்னேன்.. அழகழகாய் பொய் சொன்னேன்.. பெற்றவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலயே…


போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்று சொல்வார்கள். பொதுவாக இந்த குணம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது வாய்த்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் எனலாம்.. இதோ அவர் சொல்லுகின்றார். இது போதும் எனக்கு என்று..

அதிகாலை ஒலிகள் 
ஐந்துமணிப் பறவைகள் 
இருட்டு கதவு தட்டும் சூரியவிரல் 
பள்ளியெழுச்சி பாடும் உன் 
பாதக்கொலுசு 
உன் கண்ணில் விழிக்கும் 
என் கண்கள் 
இதுபோதும் எனக்கு 

தண்ணீர் போலொரு வெந்நீர் 
சுகந்தம் பரப்பும் துவாலை 
குளிப்பறைக்குள் குற்றாலம் 
நான் குளிக்க நனையும் நீ 
இதுபோதும் எனக்கு 

வெளியே மழை 
வேடிக்கை பார்க்க ஜன்னல் 
ஒற்றை நாற்காலி 
அதில் நீயும் நானும் 
இதுபோதும் எனக்கு 

குளத்தங்கரை 
குளிக்கும் பறவைகள் 
சிறகு உலர்த்தத் 
தெறிக்கும் துளிகள் 
முகம் துடைக்க உன் முந்தானை 
இதுபோதும் எனக்கு 

நிலா ஒழுகும் இரவு 
திசை தொலைத்த காடு 
ஒற்றையடிப்பாதை 
உன்னோடு பொடிநடை 
இதுபோதும் எனக்கு 

மரங்கள் நடுங்கும் மார்கழி 
ரத்தம் உறையும் குளிர் 
உஷ்ணம் யாசிக்கும் உடல் 
ஒற்றைப் போர்வை 
பரஸ்பர வெப்பம் 
இதுபோதும் எனக்கு 

நிலாத் தட்டு 
நட்சத்திரச் சோறு 
கைகழுவக் கடல் 
கைதுடைக்க மேகம் 
கனவின் விழிப்பில் 
கக்கத்தில் நீ 
இதுபோதும் எனக்கு 

தபோவனக் குடில் 
தரைகோதும் மரங்கள் 
நொண்டியடிக்கும் தென்றல் 
ஆறோடும் ஓசை 
வசதிக்கு ஊஞ்சல் 
வாசிக்கக் காவியம் 
பக்க அடையாளம் வைக்க 
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ 
இதுபோதும் எனக்கு 

பூப்போன்ற சோறு 
பொரிக்காத கீரை 
காய்ந்த பழங்கள் 
காய்கறிச் சாறு 
பரிமாற நீ 
பசியாற நாம் 
இதுபோதும் எனக்கு 

மூங்கில் தோட்டம் 
மூலிகை வாசம் 
பிரம்பு நாற்காலி 
பிரபஞ்ச ஞானம் 
நிறைந்த மௌனம் 
நீ பாடும் கீதம் 
இதுபோதும் எனக்கு 

அதிராத சிரிப்பு 
அனிச்சப்பேச்சு 
உற்சாகப்பார்வை 
உயிர்ப் பாராட்டு 
நல்ல கவிதைமேல் 
விழுந்து வழியும் உன் 
ஒரு சொட்டுக் கண்ணீர் 
இருந்தால் போதும் 
எதுவேண்டும் எனக்கு
?


யார் நாட மாட்டார்கள் உங்களை…! எது அலங்கரிக்காது உங்களை..!
அண்மையில் விஜய் தொலைக்காட்சி உங்களுக்கு விருது வழங்கும் போது விழா மேடையில் ஒரு கவிதை உங்கள் நடையில் சிவகார்த்திகேயனால் வாசிக்கப்பட்டது. 
அத்தனையும் உண்மை… நீங்கள் கலிபோர்னியாவில் பிறந்திருந்தால் அமெரிக்கா ஆங்கிலம் அன்றே வல்லரசாகியிருக்கும்.


கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் கவிபேரரசு வைரமுத்து அவர்களின் தலமையில் கிளம்பீற்று காண் தமிழ் சிங்கக் கூட்டம் என்ற கவியரங்கு நடைபெற்றது. அதில் தமிழ் குறித்த அவரின் கவிதை ஒலி வடிவில்..



இறுதியாக மீண்டும் மீண்டும் எங்கள் தமிழ் கவிஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை மனதார வழங்கி இந்த வரலாறு காணாத நீண்ட பதிவை நிறைவு செய்கின்றேன்.. கவித்தலைவர் பற்றி பதிவு எழுதினால் அதுவும் நீளமாகின்றது கவிப்பேரரசின் கவிதைகளின் எண்ணிக்கை போல….

புதுக்கவிதை பேனாவில் மரபுக்கவிதையின் மரபணுக்களை மையாக ஊற்றி
நீ எழுதும் வாக்கியம் தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத தனி இலக்கியம்..

கண்ணதாசனுக்கு பிறகு விதவையாய் கிடந்த மெட்டுக்களுக்கு கவிதை பொட்டுக்கள் இட்டு
வாழ்க்கை தந்த சீர்திருத்த கவிஞன் நீ..


தேசமே கொண்டாடும் பாடல்களின் சந்தம் நீ..
ஆனால் என்றென்றும் தமிழுக்கே சொந்தம் நீ..


உன் பாடல்கள் பாமரனும் கேட்டவுடன் புரிந்து கொள்ள முடியும்
அதே பாடலை ஆராய்ச்சி படிப்புக்கும் எடுத்துக்கொள்ள முடியும்
ஆம் நீ ஞானிகளுக்கு எழுதினால் அதில் கருத்து மழை பொழியும்
குழந்தைகளுக்கு எழுதினால் அதில் எழுத்துப் பிழை தெரியும்


நீ தேசிய விருது வாங்குவது இது ஆறாம் முறை
உன் இல்லம்தான் இனி இலக்கணத்தின் ஆறாம் திணை

வைரமுத்துவின் கவிதையில் இருந்தே அவருக்கொரு வாழ்த்து..



குறிப்பு :- கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “தாஜ்மஹாலில் ஒரு கவியரங்கம்” என்ற கவிதையை அவரின் கம்பீர குரலிலேயே கேட்க இத்தளத்திற்கு செல்லுங்கள்..
காதலை ரசித்து சுவைத்து பாருங்கள்..

நன்றி
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்..,
Continue reading →
Photobucket