எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, January 6, 2011

“எல்லா புகழும் இறைவனுக்கே..”

12 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
எல்லா புகழும் இறைவனுக்கே..”
இசை உலகில் அண்மைக்காலமாக இவ் வார்த்தை பிரபல்யம் பெற்றுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 81வது ஒஸ்கார் (Oscar) விருது வழங்கும் விழாவில் தனது பிரமாண்டமான இசையால் தமிழர்களை – இந்தியர்களை - உலக மக்களனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த – வைக்கின்ற Music Maestro இசைப்புயல் A.R.ரஹ்மான் தன் தாய்மொழி தமிழில் கூறிய வார்த்தைகளே அவை.

இசைத்துறைக்கு பெருமை சேர்க்கும் தமிழகத்தின் சென்னை மாநகரில் 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 06ம் திகதி இந்துவாக பிறந்தார் A.S.திலீப்குமார். இசை ஆர்வமுள்ள குடும்ப பின்னணியை கொண்ட A.S.திலீப்குமார் தனது குடும்பத்தினரின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் தனது 4வது வயதில் இசைத்துறை கல்வியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் “Piano” கற்ற திலீப் தன் சிறுவயதில் பாடசாலைகளில் இடம்பெறும் இசைப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கையில் ஓர் துயரச் சம்பவம் நடந்தேறியது. தன்னுடைய பாசம் மிகுந்த தந்தை சேகரை தனது 9வது வயதிலே இழந்தார். இதனால் திலீப்குமாரின் குடும்பம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் இவரின் இசை ஆர்வத்தைக் கண்ட தாயார் அவரை கிராமிய இசையை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து அதில் வெற்றியும் பெற்றிருந்த “இசைஞானி” இளையராஜாவின் இசைக்குழுவில் இணைந்தார். இளையராஜாவின் இசைக்குழுவில் Key Board கலைஞராக தன் இசைப்பயணத்தை ஆரம்பித்த போது திலீப்குமாருக்கு வயது 11 மட்டுமே..

தபேலா கலைஞர் ”ஷாஹீர் ஹீசைன்” (Zakir Hussain) அவர்களின் இசைநிகழ்ச்சிகளில் பங்குபெறுவதன் பொருட்டு உலகளாவிய ரீதியில் பயணம் செய்த திலீப் குமாரை ”ஷாஹீர் ஹீசைன்” அவர்கள் Trinity College of Music at oxford University – UKல் இணைத்தார். அங்கு மேற்கத்தேய இசையினையும், அதன் தன்மையினையும், அதனை கீழைத்தேய இசையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற நுணுக்கங்களை கற்ற திலீப் குமார் 1987ல் தன் தனிப்பட்ட விருப்பின் பேரில், தனிப்பட்ட காரணங்களுக்காக “இஸ்லாம்” மதத்தை தழுவிக் கொண்டார்.

இஸ்லாமிய மதத்தை தழுவிய பின் தன் பெயரினை “அல்லா றாக்கா ரஹ்மான்” (Allah Rakha Rahman) என மாற்றிக்கொண்டார். இந்நிலையில் இசை உலகில் பிரவேசித்து 5 வருடங்கள் கடந்த நிலையில் 1989ல் தன் தொழில் ரீதியான இசைக் கலையகத்தை (Music Studio) ஆரம்பித்தார். ”பஞ்சதன்” என்ற இவரின் இக்கலையகம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று ஆசியாவின் முதற்தரமான, பிரமாண்டமான இசைக்கலையகங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

A.R.ரஹ்மானின் இசை,விளம்பர ஆல்பங்களைக் (Music Studio) கேட்ட தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்தினம் கவிதாலயா சார்பில் அவரை நேரடியாக அணுகி தனது திரைப்படமான ”ரோஜா”வில் அறிமுகப்படுத்தினார். இந்திய காஷ்மீர் எல்லைப்பிரச்சனையை தழுவி 1992ல் மும்மொழிகளிலும் வெளியாகி இந்தியா முழுவதும் இத்திரைப்படம் கலக்கிக் கொண்டிருந்தது. இதற்கான பாடல் இசை மட்டுமன்றி பின்னணி இசையையும் மிகச்சிறப்பாக ரஹ்மான் செய்திருந்தார். தனது முதலாவது படத்திலேயே இந்தியாவின் அனைத்து மக்களையும் “இசை” என்னும் மொழியால் ஒன்றுபடுத்திய ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றார்.

அத்துடன் இவர் அறிமுகப்படுத்திய பல பாடகர் பாடகிகளுக்கு சிறந்த எதிர்காலம் அமைந்தது எனலாம்.

“ரோஜா”வினை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த ரஹ்மான் 1995 ஹிந்தி திரையுலகில் கால் பதித்தார். “ரங்கீலா” (Rangeela) ஹிந்தி திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்ததன் ஊடாக ஹிந்தி மொழியிலும் பிரபல்யமடைந்தார். ரங்கீலா வெற்றியை தொடர்ந்து Dilse (1998), Taal (1999), Zubeidaa(2001), Lagaan, Hindusthani, Bombay என தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வெற்றி பெற வைத்தார்.

திரைப்படத்திற்கு திரைப்படம் இசையில் புதுமைகளையும் புதிய பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் A.R.R “தீன்மாலைப் பொழுது”(திலீப் குமாரின் பெயரில் வெளிவந்தது) ஜனகனமன வந்தேமாதரம் (2007), One Love, Return of the thief of Baghdad(2003), Pray for me Brother(2007) என பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவரின் இசையால் மேற்கத்தேய நாட்டவர் இவரின் ஆல்பங்கள் திரைப்பட பாடலகளை ரசிக்க ஆரம்பித்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக “வாரியர்ஸ் ஆஃப் ஹவன் அன்ட் ஏர்த்”, India போன்ற திரைப்பாடல்கள் மேற்கத்தேய நாடுகளில் பிரபல்யம் பெற்றிருப்பதை குறிப்பிடலாம். இதில் 2001ல் வெளிவந்த India திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான “Academy” விருதை 2002ல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

A.R.ரஹ்மானின் இசையின் தனித்துவம் என்னவென்றால்  எந்த மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் பொருத்தமாக அவரின் இசை இருப்பதுதான். இதன் வெளிப்பாடே தாளம், பம்பாய், உயிரே, குரு போன்ற திரைப்படங்களின் மொழிபெயர்ப்புகள்.

தன் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதினை தட்டிச் சென்ற A.R.ரஹ்மான் தொடர்ச்சியாக மின்சாரக்கனவு, Lagaan, கன்னத்தில் முத்தமிட்டால் என தேசிய விருதுகளை அள்ளிச் சென்றார். தேசிய விருதுகளை அதிகம் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற A.R.R Padma Shri, Awarded by the Government of India (January, 2000), ராஜீவ் காந்தி விருது, R.D.பர்மன் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக உலகளாவிய ரீதியில் இசை நிகழ்வுகளை நடாத்தும் A.R.ரஹ்மான் தனியே பணம் சம்பாதிப்பதற்காக இவற்றை நடாத்துவதில்லை. மனிதாபிமான எண்ணம் கொண்ட இவர் வறியவர்கள், அனாதை சிறார்கள், நோயாளர்கள் என என பல தரப்பினருக்கும் உதவும் பொருட்டும் இசை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார். இதன் உச்சக் கட்டமாக 2004 டிசம்பர் 26ல்  தென்னாசிய தென்கிழக்காசிய நாடுகளை சுனாமி தாக்கிய போது இந்தியாவின் தமிழகம் மரணக்காடாக தோற்றமளித்தது. தமது உறவுகளை இழந்த துன்பத்தில் இருந்த மக்களை தேற்றும் விதமாக தமிழகத்தின் கடலோர கிராமத்திற்கு சென்ற A.R.R சுனாமி தாக்கிச் சென்ற படகுகளை நிகழ்வுக்கான மேடையாக்கி தொடர்ச்சியாக 8 மணித்தியாலம் மக்களை துன்பத்தின் பிடியில் இருந்து தன் இசையால் மீட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை தீவில் துன்பப்படும் மக்களுக்காக பிரார்த்திக்கின்றேன் என கூறிய A.R.ரஹ்மான் இலங்கையை மையப்படுத்தி உருவான “கன்னத்தில் முத்தமிட்டால்...” திரைப்படத்தில் இலங்கைப்பாடல்களுக்கு தன் இசையால் மெருகூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

ஒவ்வொரு இன மக்களினதும் பாரம்பரிய இசையை தனது இசையினுள் சேர்த்துக் கொள்ளும் A.R.ரஹ்மான் இசை ரசிகர்களால் “இசைப்புயல்“ என அழைக்கப்படுவதற்கு பொருத்தமானவர்தான். The Mozart of Madras என்னும் புனை பெயரும் இசைப்புயலுக்கு உண்டு என்பதை நீங்கள் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

தமிழ் ரசிகர்களை- இந்தி ரசிகர்களை தன் இசை நீரோட்டத்தில் நீந்த வைத்த A.R.ரஹ்மான் உலக இசைப்பிரியர்களை- மேற்கத்தேசத்தவர்களை தன இசை சமுத்திரத்தினுள் நீந்த வைத்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

ஆம் கடந்த ஆண்டு(2008) வெளிவந்து இந்தியாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது “ஸ்லம்டாக் மில்லினர்” (Slumdog Millionaire) திரைப்படம். மும்பை நகரின் சேரிப்பகுதியில் வாழும் இளைஞனை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார் இசைப்புயல் A.R.ரஹ்மான். பல சர்ச்சைகளை கடந்து வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு - A.R.ரஹ்மானுக்கு வந்து சேர்ந்த விருதுகளை திரையுலகம் – தமிழுலகம் என்றும் மறக்காது.

சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் (Jai Ho) என்பவற்றுக்கான முதல் விருதாக வந்து சேர்ந்தது பிரித்தானியாவின் “கோல்டன் க்ளோப்” விருது. இவ்விருதை A.R.R கைப்பற்றியதும் இசை உலகம் இவர் பக்கம் திரும்பியது எனலாம். 2008ற்கான ஒஸ்கார் (Oscar) விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது ஸ்லம்டாக் மில்லினர். திரைப்படத்திற்கு மொத்தமாக 10 விருதுகள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் A.R.ரஹ்மான் அதில் 2 விருதுகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை உறுதியாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் 22.02.2009 மாலை 06 மணியளவில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 81வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா ஆரம்பமானது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஒஸ்கார் விருதை முதலாவது விருதாக ஸ்லம்டாக் மில்லினர் பெற்றுக்கொள்ள சுமார் மாலை 07.15 மணியளவில் (இலங்கை நேரப்படி 23.02.2009 காலை 08.35 மணியளவில்) உலக இசைத்துறை வியக்கும் வண்ணம் – தமிழினம் தலை நிமிரும் வண்ணம் வந்து சேர்ந்தது “சிறந்த பின்னணி இசைக்கான (best score) ஒஸ்கார் விருது. இசைப்புயல் A.R.ரஹ்மான் ஒஸ்கார் ரஹ்மானாக (osc AR Rahman) மாற்றம் பெற்றார்,முடி சூடிக் கொண்டார். தொடர்ந்து அவருக்கான இரண்டாவது விருது வந்து சேர்ந்தது Jai Ho பாடலுக்கான “சிறந்த பாடலுக்கான (best song) ஒஸ்கார் விருது”. இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டு ஒஸ்கார் மேடையில் ரஹ்மான் உரையாற்றிய போது ஒஸ்கார் அரங்கில் தமிழ் மொழி மணம் வீசியது. “எல்லா புகழும் இறைவனுக்கே...” என  தமிழில் உரையாற்றி முடித்த போது ஒஸ்கார் அரங்கம் தமிழ் அன்னையின் அரங்கம் ஆயிற்று. அரசியலில் ஒபாமாவின் உரை எவ்வளவு பிரபல்யமடைந்ததோ அதே போன்று A.R.ரஹ்மானின் உரை இசையுலகில் பிரபல்யம் பெற்றது. “போட்டி நிறைந்த இசை உலகில் அன்பு ஆதிக்கம் என்ற இரண்டு தெரிவுகளில் நான் அன்பை தெரிவு செய்தேன்.அந்த அன்பு என்னை இங்கு நிறுத்தியுள்ளது.” என்ற இவரின் உரை மட்டுமல்ல Jai Ho பாடலும் உலக சாதனை படைத்தது ஒஸ்கார் தினத்தில் – ஒரே தினத்தில் உலகம் முழுவதும் ஒலி,ஒளிபரப்பு செய்யப்பட்ட உரையாக பாடலாக இவை இரண்டும் சாதனை படைத்தன.

“வெற்றியின் சின்னம்” என்ன கருத்தை தமிழில் கொண்ட Jai Ho ஹிந்தி மொழிப் பாடல் ஆங்கில தேசத்திலும் வெற்றி முரசறைந்தது – தமிழனின் வெற்றியை பறை சாற்றிக் கொண்டிருந்தது.

திரையுலகின் அதியுயர் விருதாகிய ஒஸ்கார் விருதினை தன் 43வது வயதில் பெற்றுக் கொண்ட அல்லா றாக்கா ரஹ்மானுக்கு மென் மேலும் பல ஒஸ்கார் விருதுகளை பெற வேண்டும் என, யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரி கலை மாணவர் மன்றம் 2009 சமூகம் வாழ்த்துவதில் பெருமையடைகின்றது. உங்கள் இசைப்பயணம் தொடர உங்களுடன் இணைந்திருப்போம்.

எல்லா புகழும் இறைவனுக்கே..”


இக் கட்டுரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரி 2009 கலை பிரிவு மாணவர்களான எங்களால்-(செயற்குழு உறுப்பினர்கள்:- த.பிரஜாபதி-பிரஜன், மு.சிவகரன், ச.துவாரகன், பா.மகிதரன், வி.கிஷோ, இ.பிரதீபன் இவர்களுடன் நான்) 11.03.2009 வெளியிடப்பட்ட தேனமுதம் சஞ்சிகையில் இடம் பெற்ற என் கட்டுரையாகும்.
மேலும் A.R.ரஹ்மானுக்கு கௌரவம் வழங்கும் பொருட்டு சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வின் பின்னணி இசையாக அவரின் இசைகள் முழுமையாக பயன்படுத்தபட்டன என்பதும் குறிப்பிடதக்கது..

இன்று இக் கட்டுரை மீண்டும்(அதே படங்களுடன்) பதிவாகிறது பிறந்த நாள் பரிசாக......

மீண்டும் சந்திப்போம்
என்றும் அன்பின்,

12 Responses so far

  1. அருமையான தொகுப்பு ஜனகன்
    Happy Birthday - ஏ.ஆர்.ரஹ்மான்

  2. அருமையான கட்டுரை :)

  3. Jana says:

    வாழ்த்துக்கள்.

  4. sinmajan says:

    அருமை.. யாழ் இந்து சஞ்சிகையில் இது பற்றி எழுதியிருக்கிறீர்கள் #பெருமை

  5. Bavan says:

    அருமை
    வாழ்த்துக்கள்..:)

  6. @டிலீப் said...:-
    நன்றி நண்பா..வந்தேன் படித்தேன் அருமை

    @Harini Nathan said...:-
    நன்றி அக்கா

    @Jana said...:-
    நன்றி அண்ணா

    @sinmajan said...:-
    நன்றிகள்

    @Bavan said...:-
    நன்றிகள் நண்பா....

  7. நல்லதொரு தொகுப்பு ரசனையுடன் பதிந்துள்ளிர்கள்...

  8. @ம.தி.சுதா :-
    மிக்க நன்றி அண்ணா..

  9. அருமையான தொகுப்பு.
    கட்டுரைக்குக் கோடி நன்றிகள்.

  10. @அரபுத்தமிழன் :-
    மிக்க நன்றி சகோதரா....

  11. நல்லதொரு தொகுப்பு!

  12. @கார்த்தி :-
    நன்றிகள் அண்ணா..

Leave a Reply

Photobucket