எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, July 7, 2011

கைவிடப்பட்டுள்ள நிலையில் வரலாற்று சின்னங்கள்

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணத்தில் மன்னர் காலம் தொட்டு இன்று வரை அதிகளவில் பிரபல்யம் பெற்ற பிரதேசமாக காணப்படுவது நல்லுார் பிரதேசமாகும். மன்னர் காலத்தில் அவர்களின் இராசதானிகள், அரண்மனைகள் என அரசியல் ரீதியாகவும் ஆலயங்கள் என்பதனுாடக பண்பாட்டு ரீதியிலும் நல்லுார் பிரபல்யம் பெற்றிருந்தது. இதனால் வாழையடி வாழையாக வந்த சந்ததியினருக்கு யாழ்ப்பாணம் என்றதும் நல்லுார் சட்டென ஞாபகம் வரும் விதத்தில் மனதில் பதிந்திருந்தது, பதியப்பட்டிருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போதும் இது அசையாதிருந்தது. விடுமுறையை களிப்பதற்காக யாழ்ப்பாணம் வருபவர்களின் பிரதான தரிசனமாக நல்லுார் காணப்படுகிறது. உள்ளுர் மக்களாலும் வெளியுர் மக்களாலும், வெளிநாட்டு மக்களாலும் நிரம்பியிருந்த நல்லுார் 1980 களின் ஆரம்ப காலத்தில் இலங்கையில் உண்டான பதற்ற நிலையும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற 30 ஆண்டு யுத்தம் என்பன காரணமாக வெறிச்சோடி போகும் நிலை உண்டானது.

2002ல் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையின் போது வெளி பிரதேச மக்களின் வருகை யாழ்ப்பாணத்தை நோக்கி மீள ஆரம்பித்ததும் நல்லூர் பிரதேசம் மேலும் பிரபலம் பெற ஆரம்பித்தது. எனினும் இது 2007 வரையே தொடர்ந்தது.

2009ல் யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதி சூழல் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு யாழ்ப்பாணத்தை நோக்கி திரும்பியது. தினசரி தென்னிலங்கை சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பலநுாற்றுக்கணக்கில் யாழ் வர தொடங்கினர். இதன் காரணமாக சோர்ந்திருந்த நல்லுார் மீண்டும் சுறுசுறுப்பாகியது. 

பொதுவாகவே நல்லுார் கந்தசுவாமி ஆலயம் இலங்கை பற்றி அறிந்தவர்களின் மத்தியில் பிரசித்தி பெற்றது. ஆகையால் யாழ்ப்பாணம் நோக்கி வரும் இந்தியா உட்பட பல நாடுகளின் பயணிகள் நல்லுார் வந்து செல்ல தவறுவதில்லை. நல்லுார் முருகன் ஆலயம் பெரிய அழகிய கோபுரம், புதிதாக அமைக்கப்படும் கோபுரம், பரந்த ஆலய வளாகம் என மிக பிரமாண்டமான வடிவமைப்புடன் தோற்றமளிக்கின்றது.
மேலும் ஆலயத்தினை சூழ உள்ள திருமண மண்டபங்கள், மணிமண்டபங்கள், நினைவுகற்கள் முதலியவும் சுற்றுலா பயணிகளின் பார்வையில் அகப்படுகின்றன.


பொதுவாக சுற்றுலா பயணிகளின் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பாக இருப்பது குறித்த ஓர் இடத்தில் அனேக விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். அதனால் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நல்லூர் ஆலய சுற்றுப்புறத்தில்  விற்பனை நிலையங்கள் பல தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நல்லுார் சிறு வர்த்த நகராகி விட்டது

இவை பயணிகளை கவர்ந்திழுக்கின்றன என்பது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் மகிழ்விக்க கூடிய இடங்களும் நல்லுாரை சுற்றி காணப்படுகின்றன. ஆனால் அவை இன்று கவனிப்பாரற்ற நிலையில் சிதையும் தறுவாயில் உள்ளன. அதனால் அவை அனுபவிக்கும் நிலையில் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.
தரைமட்டமாக்கப்பட்டுள்ள பூங்காவின் ஒரு பகுதி

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வீதியில் சுமார் 800m தொலைவில் பூங்கா ஒன்று காணப்பட்டது. அன்று இப்பூங்காவானது சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களுடன் அழகிய தோற்றத்துடன் ரம்மியமாக விளங்கியிருந்தது. ஆனால் இன்றோ இப்பூங்கா கைவிடப்பட்ட பிரதேசம் போல காட்சியளிக்கின்றது. சிறு வயதில் நான் விளையாடிய இந்த கிட்டுப்பூங்காவில் இருந்த ஊஞ்சல்கள் இன்று ஆட்டமின்றி காணப்படுகின்றன. அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை குகை, செயற்கை குன்று செயற்கை நீர்வீழ்ச்சி என்பனவும் இன்று அழியும் நிலையில் காணப்படுகின்றன.



பூங்காவில் உள்ள குகை ஒன்றின் சிதைவடைந்த பகுதி

தொடர்ந்து பருத்தித்துறை வீதியில் செல்கையில் உள்ள நுழைவாயில், மந்திரி மனை முதலியனவும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. இக்கட்டிடங்களின் சுவர்கள் வெடித்தும்,கட்டிடத்தின் சுவர்களை ஊடறுத்து மரங்கள் வளர்ந்திருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. நீண்டகாலமாக இவற்றை பாதுகாக்கும் வேலைகள் எதுவும் இக்கட்டிடங்களுக்கு இடம்பெறவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே.



தமிழா்களின் பண்டைய வரலாற்றை பேசிநிற்கும் தடங்களில் முக்கிய இடம் வகிக்கும் இவ்விடங்களுடன் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் சிலை ஒன்றும் இங்கு காணப்படுகின்றது. தமிழர்களின் ஓயாத வீரத்தினை பாராட்டி நிற்கும் இச்சிலையானது இன்று முறையான பராமரிப்பு இனை்மையால் உடைந்து விடும் சாத்தியத்தில் காணப்படுகின்றது.

இச்சிலையில் உள்ள சங்கிலிய மன்னனின் குதிரையினது முகமானது மிகவும் சிதைவடைந்துள்ளது. மன்னனின் பட்டத்து குதிரையின் மூக்கு உடைந்த நிலையில் அந்த சிலையை நான் கண்ட போது பல்வேறு நடைமுறை சம்பவங்கள் மனதில் வந்து போயின. இவ்வாறான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள் பல யாழில் சிதைவடைந்த நிலையில் இருப்பது மனவேதனையை தரும் விடயங்களாகவே அமைகின்றது.

இவ்வாறன வருந்த தக்க விடயத்தின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இங்கு,

சுற்றுலா பயணிகளினால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் மிக அதிகமாகும். அதிலும் காலநிலை ரீதியாக நோக்குகையில் யாழ்ப்பாணத்தின் காலநிலையானது வருடமொன்றிற்கு எட்டு மாதங்கள் வரை சுமுகமாகவே இருக்கும். இதனால் அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை யாழ் நோக்கியதாக அமைகின்றது. ஆனால் இங்கிருக்கின்ற வளங்கள் உரியவர்களினால் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் வேண்டா வெறுப்பாக கைவிடப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் யாழ்ப்பாணம் வரும் இவர்கள் திரும்பிச்செல்லும் போது ஏமாற்றத்துடனேயே செல்கின்றனர்.

ஆகவே யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பகுதியாக விளங்கும் நல்லுார் பகுதியை குறித்த தரப்பினர் துரித முயற்சி எடுத்து அழகு படுத்துவதன் ஊடாக இனி வரவிருக்கும் சுற்றுலா பயணிகளையும் கவரகூடியதாக இருக்கும். அத்துடன் யாழ்ப்பாணத்தின் வரலாறு பேசும் சின்னங்கள் அழிவடையாமல் பாதுகாக்கப்படுவதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு யாழ் மண்ணின் தொன்மை புலப்படுத்தபடும். ஆகையால் இதற்கான நடவடிக்கைகளை குறித்த தரப்பினர் மேற்கொள்வது காலத்தின் காட்டாயமாகும்.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,
Continue reading →
Tuesday, July 5, 2011

அஸ்தமனத்தில் உதயசூரியன் - நேரடி பதிவுகள்

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

சொந்தமாக காணி, சொந்தமாக ஒரு வீடு, கை நிறைய சம்பளத்துடன் வேலை, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலம் தரக்கூடிய சிறந்த கல்வி என அனைத்து வசதிகளுடன் வாழும் எம்மவர்கள் மத்தியில் இவை அனைத்தும் இன்றுவரை நிறைவேறாத கனவுகளாக மாறி இருக்கின்ற மக்களும் எம்மிடையே இருக்கின்றனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களின் கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாகவே ஒர் இடத்தில் வசித்து வந்தாலும் சொல்லிக்கொள்ள கூடிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற மக்களை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உதயசூரியன் என்ற கிராமத்தில் கண்டோம்.

பெயரில் தான் உதயசூரியன்..அவர்களின் வாழ்க்கையோ இன்னும் அஸ்தமனத்தில்தான்.

சாவகச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து கச்சாய் வீதியில் சுமார் 1500m தொலைவில் இருக்கும் சேரிக்குடியிருப்பு கிராமமே இந்த உதயசூரியன் கிராமமாகும். நாங்கள் கிராமத்தினுள் நுளைந்ததும் வேற்றுக்கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்த்தனர் அம்மக்கள். காரணம் அவர்கள் இருந்த நிலையில் நாம் அவர்களுக்கு அப்படித்தான். எம் கண்ணில் எதிர்பட்ட முதல் பெண்மணியிடம் முதலில் பேச்சுக்கொடுத்த போதுதான் தெரிந்தது அது ஒரு கைவிடப்பட்ட ஒதுக்குப்புறமான நிலப்பகுதி என்று. கடற்கரை பகுதியோடு சார்ந்த நிலம் என்பதால் அது சதுப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் அதனால் அரசினால் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவும் 2006 வரை அவ்விடம் இராணுவ வலயத்தின் கீழ் இருந்ததாகவும் அப்பெண் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பம் முதலே தாம் வசித்து வரும் பிரதேசம் இது என்றும் சிறிது காலம் வரை (இங்கிருந்து இராணுவம் வெளியேறும் வரை) அருகில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பில் வசித்து வந்ததாகவும் கூறிய அவர், இவ்விடத்தில் இராணுவம் வெளியேறியவுடன் மீண்டும் வந்து குடியேறியதாவும் தெரிவித்தார்.
அவர்களுடைய வீடுகளை பார்க்கும் போது 4 தடிகளை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு முழுமைபெறாத வானம் பார்க்கும் கூரையோடு கொண்ட சிறு கூடு போல காட்சியளித்தது. மழை வந்தால் அவர்கள் வீட்டை நாட வேண்டிய தேவையில்லை.. ஏனெனில் வீட்டிற்குள் நின்றாலும் நனைவதை அவர்களால் தவிர்க்க முடியாது. கணவனின் நாளாந்த 300 ருபாய் வருமானத்தில் (அதுவும் உறுதியாக கிடைக்காது) 4 பிள்ளைகளையும் வளர்ப்பது எங்கு?? வீடு வேய்வது எங்கு..??

அதிலும் ஒரு சிக்கல் இருப்பதை அவருடன் மேலும் உரையாடும் போதுதான் அறிந்தோம். அந்த பகுதியில் இருக்கும் எவருக்கும் அந்த காணிகள் சொந்தமாக வழங்கப்படவில்லை. அது அரசாங்க காணி என்பதால் அரசின் மனதில் எப்போது தோன்றுகின்றதோ அப்போதே அவர்களுக்கு அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். ஏற்கனவே யாழப்பாணத்தின் வேறு சில இடங்களில் அரசு தன் காணிகளை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது. இது பற்றி அந்தப் பெண் கூறிய விடயங்களை இங்கு ஒலி வடிவில் தந்துள்ளேன்.. கேட்டறிந்து கொள்ளுங்கள்.



அப்பெண்ணுடன் உரையாடிய பின் அங்கு இருக்கும் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளிகள் வசித்துவரும் இடத்தை அடைந்தோம் (அதுவும் உதயசூரியன் கிராமம் தான்). அங்கு ஒரு பாலர் பாடசாலையில் மழலைகளுக்கு கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவருடன் உரையாட ஆரம்பித்தோம். மயுரிகா என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் குறிப்பிடுகையில் தமது சொந்த இடம் கிளாலி என்றும் அங்கு இன்னும் மக்கள் குடியேற அனுமதிக்காமையால் இங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். பாலர் பாடசாலைகளுக்கு மாணவர்களை பெற்றோர் ஒழுங்காக அனுப்பி வருவதாகவும் ஆனால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் வீதம் குறைவு என்றும் அவர் எம்முடன் உரையாடும் போது தெரிவித்தார். இது குறித்த காரணங்கள் பற்றி மற்றொரு பதிவில் பின்னர் கூறுகின்றேன்.

மேற்படி ஆசிரியை தமது வருமானம் பற்றி கூறும் கருத்துகள் இங்கே..






அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் ஒரு முதியவருடன் உரையாடுமாறு அப்பகுதி மக்கள் எமக்கு கூறினர். அதற்கான காரணம் அவரிடம் இருந்து நிறைய விடயங்களை அறிய முடியும் என்பதால் ஆகும்.









அவரை அடையாளம் கண்டு அவருடன் பேச்சை ஆரம்பித்தோம். 1960 களில் இருந்து அப்பகுதியில் வசித்து வரும் அம்முதியவர் இன்று தனித்து வாழ்ந்து வருகின்றார். அவரின் மனைவி பிள்ளைகள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று விட்டனர். அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் கஸ்டங்கள் பற்றி அவர் கூறுகையில் எந்த நிறுவனமும் தமக்கு எவ்வித உதவிகளும் செய்ததில்லை என்றும், அரசிற்கு தாம் இங்கு இருப்பது கூட மறந்து விட்டது எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தமக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவோம் என பல தடவைகள் உரியவர்களால் தெரிவிக்கப்பட்டாலும் இன்று வரை எவ்வித பலனும் தமக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அப்பகுதியில் வாழும் மக்களின் ஒருமித்த குரல் என்னவென்றால் ஏனைய மக்களை போன்று நாம் வாழ்வதற்கு இப்பகுதியை தமக்கு சொந்தமாக்கி தாருங்கள் என்பதே.
அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் பல உதவிகள் வழங்க முன்வந்த போதும் சொந்தக்காணி இன்மையால் அவர்கள் எவ்வித உதவிகளையும் பெற முடியாமல் இருக்கின்றனர். நகர சபைக்கு சொந்தமான சிறு நிலப்பரப்பு அப்பகுதியில் இருந்தும் அவர்களினால் கூட அப்பகுதியில் வசிக்கும் தம் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். மழைகாலங்களில் இடம்பெயர்ந்து அருகிலுள்ள பாடசாலையில் தங்கியிருக்கும் போது மாத்திரம் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் அதாவது சமைத்த உணவு, உடுதுணிகள் முதலிய உதவிகள் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அப்பகுதிக்கான மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என அப்பகுதிக்கான மீள் எழுச்சிச்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார். அதன் படி சனசமூக நிலையம், முன்பள்ளி, பொதுக் கிணறு முதலியன இத்திட்டத்தின் கீழ் அப்பகுதிக்கு அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்பகுதி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காகவும் வீதி அமைப்பதற்காகவும் மாதிரிப்படம் அமைத்து நகர சபைக்கு வழங்கியிருப்பதாகவும் அவர்களால் எவ்வித முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிராமத்திற்கான வரைபடம்
எனவே இப்பகுதி மக்களுக்கான சொந்த நிலம் எப்போது கிடைக்கும்? அவர்களும் எப்போது இயல்பு வாழ்வுக்கு திரும்புவது? போன்ற விடை தெரியா வினாக்களுக்கு மத்தியில் மற்றுமொரு பிரச்சனை எமக்கு கிடைத்தது வேறொரு தரப்பில் இருந்து.. அப்பிரச்சனையானது அப்பகுதியில் வாழ்பவர்களின் எதிர்காலம் தொடர்பானதாகும். அப்பிரச்சனை பற்றி பார்ப்போமானால்,

மாணவர்களில் கல்வி நிலை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. பெற்றோர்களின் மோசமான நடத்தை, கவனிப்பின்மை முதலியவற்றினால் அப்பகுதி மாணவர்களின் வரவு பாடசாலைகளில் பின் தங்கி காணப்படுகின்றது. இது குறித்து அப்பகுதியில் இருக்கும் மெதடிஸ்த மிசன் பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை கோலம் ஏனைய பகுதி மக்களில் இருந்து வேறுபடுவதாக இருக்கின்றது. இளவயது திருமணம்(பெண்கள் 15-18 வயதுக்குள்ளும் ஆண்கள் 17-20 வயதுக்குள்ளும் திருமணம் செய்கின்றனர்), நெருக்கமான குடியிருப்பு கோலம் என்பதால் உண்டாகும் கலாச்சார முரண்கள், அதனால் ஏற்படும் பலதார திருமணங்கள்(இதில் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை கொண்டுள்ளனர்) முதலியன பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகள் தொழிலுக்கு அனுப்பப்டுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இன்மையும்,கல்வியறிவு போதியளவு இன்மையுமாகும் என அவர் தெரிவித்தார். அப்பகுதிக்கும் கட்டாய கல்வி செயற்பாடுகளும் ஏனைய விழிப்புணர்வு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை படிப்படியாக நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர் அதற்கு உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சாவகச்சேரி ட்றிபேக் கல்லுாரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
அப்பகுதியில் மக்களுக்கு ஒரு இலட்சிய பாதை இருப்பதில்லை. ஒரு உடனடி பணம் தரக்கூடிய சிறு தொழில், மதுபோதை, வாழ்க்கைக்கு ஒரு துணை அதுவும் சாதாரண தர கல்வியின் போதே என ஒரு குறுகிய வாழ்க்கையையே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறு வயதில் ஒழுங்காக கற்று வரும் பிள்ளையும் குறித்த வயதை எட்டியதும் தன் சமூகத்தில் இருக்கும் தன்வயதொத்தவர்களின் செயற்பாட்டை அவதானித்து கல்வியை கைவிடுகின்றது. உதாரணத்திற்கு தமது கல்லுாரியில் கற்ற ஒரு பெண் பிள்ளை சாதாரண தரத்தில் 6A சித்திகளுடன் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த போது திருமணம் செய்து கல்வியையும் கைவிட்டதாகவும் தெரிவித்தார். சிறு வயது திருமணம் அவர்களுக்கு நிலைப்பதில்லை என்ற உண்மையையும் அவர் தெரிவித்தார்.

இருந்தும் ஒரு சிலர் அப்பகுதியில் இருந்து விலகி தமது வாழ்க்கை கோலத்தை மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு காரணம் அவர்களுக்கு உண்டாகும் மாற்றம் வேண்டிய சிந்தனையே. ஆனால் இச்சிந்தனை அங்கிருக்கும் ஏனையோருக்கும் உண்டாக வேண்டும் என்றால் உரிய தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒழுக்கக்கல்வி அப்பகுதி மக்களுக்கு அவசியம். இதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தான் ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே மக்களின் வாழ்வு என்பது அவரவர் கைகளில் என்பதோடு அடுத்தவரின் வழிகாட்டலிலும் தங்கியுள்ளது. அதே போன்று அஸ்தமிக்கும் தறுவாயில் உள்ள உதயசூரியன் மக்களிற்கும் ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும். அவர்களும் நம்மவர்கள் தான். அவர்களுக்கான நிலத்தினை அரசு வழங்குவதோடு அப்பகுதி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் இப்போது எது சரி என நினைத்து வாழ்கின்றார்களோ அது தவறு என்பதை உணர்த்த வேண்டும். அதற்கு மத அமைப்புகள், சமூக அமைப்புகள் ஏன் சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் இப்படியான உதயசூரியன் கிராமம் போன்ற கிராமங்கள் இலங்கையில் ஆங்காங்கே பரவி இருக்கும். அவை அனைத்தும் இனங்காணப்பட்ட வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.
ட்றிபேக் கல்லுாரியில் எம்மை வரவேற்ற வார்த்தைகள்

இந்த கிராமத்திற்கான பயணத்தில் என்னோடு இணைந்து கொண்ட நண்பன் கஸ்ரோ மற்றும் நண்பிகளான துவாரகி, ஹம்ஷா ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன். அவர்களின் பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு விரைவில் தருகின்றேன்..


கஸ்ரோவின் வார்ப்புக்களில் இருந்து கதை சொல்லும் படங்கள்


நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,
Continue reading →
Thursday, June 30, 2011

கடிவாளம் பத்திரிகை வெளியீடு.

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி முழுநேர இரண்டாண்டு ஊடக கற்கை நெறி மாணவர்களின் வெளியீடுகளில் முதல் வெளியீடான ‘கடிவாளம்’ பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

யாழ் பல்கலை கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலை பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், ஊடகக் கல்வியானது கல்விச் செயற்பாடுகளில் முதன்மையானதாகும். இதனை ஒரு கலையாக தனித்துவம் வாய்ந்தவர்கள்; வளர்த்தனர். இன்றைய நிகழ்வின் வெளியீடான பத்திரிகையின் பெயர் கடிவாளம் எனும் போது நான் சற்று சிந்தித்தேன். பொதுவாக எந்த செயற்பாட்டுக்கும் ஒர் கட்டுக்கோப்பான ஓர் வரையறையால் வழிப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் இப்பத்திரிகைக்கு கடிவாளம் எனும் அர்த்தமான பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.

ஏனைய பல்கலை கழகங்களுடன் ஒப்பிடும் போது யாழ் பல்கலை கழகத்திலேயே முதன் முறையாக ஊடக கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. எனவே யாழ் பல்கலை கழக ஊடக மாணவர்கள் மற்றைய பல்கலை கழகங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் தனித்துவம் உள்ளவர்களாகவும் வருவார்கள். ஆகவே இதனுடன் தொடர்புடைய அனைவரும் அர்பணிப்புடன் செயற்பட்டு சமுகத்தை கட்டியெளுப்பும் மாறாத பொறுப்பு எங்களிடம் இருத்தல் வேண்டும். யாழ் பல்கலை கழகத்தின் மகுட வாசகமான ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்பதற்கமைவாக உள்ளதை உள்ளவாறு சொல்வது ஊடகம் என்பதற்கு அமைவாகவும் மாணவர்கள் செயற்பட வேண்டும். எனவே இந்த குறுகிய கால கற்கை நெறியை தொடர்ந்து முதல் முயற்சியாக கடிவாளம் பத்திரிகையினை வெளியிடும் முயற்சியை பாராட்டுவதோடு மாணவர்களின் பணி இன்னமும் சிறக்க யாழ் பல்கலை கழகத்தின் சார்பாக எங்களது உதவி உங்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்புரையாற்றினார். பத்திரிகைகளின் மதிப்பீட்டு உரைகளை குடாநாட்டு பத்திரிகை ஆசிரியர்களும்,எழுத்தாளர்களும்,பேராசிரியர்களும் மேற்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குடாநாட்டு ஊடகவியலாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்த வெற்றி FM-TV நிறுவனத்திற்கும், தீபம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் மற்றும் தொலைபேசி ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வாழ்த்திய சக்தி Fm நிறுவனம், சூரியன் Fm நிறுவனம் மற்றும் பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும் ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஸ் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றி
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,


Continue reading →
Friday, June 24, 2011

கவியரசு மற்றும் மெல்லிசை மன்னர்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
தமிழ் திரையுலகு இன்று இந்நிலையில் உலகெங்கும் பேசப்படுவதற்கு சிறந்த அத்திவாரமிட்டவர்களில் முக்கியமானவர்களில் இருவரான அமரர் “கவியரசு”கண்ணதாசன், “மெல்லிசை மன்னர்” M.S.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்த தினங்கள் இன்றாகும்..

காலத்தால் அழியாத பாடல்கள் பலவற்றை எமக்களித்த இருவருக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...



இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் என்னைக்கவர்ந்த சில பாடல்கள் இதோ...


1. அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா...

வரிகள்- கவியரசு கண்ணதாசன்
இசை- மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்
படம் - மன்னாதி மன்னன்

வீர உணர்வை கூறும் இப்பாடலுக்கான இசை இன்றும் மனதில் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப கூடியதாகவே உள்ளது..



2. மாலை பொழுதின் மயக்கத்திலே... படம்- பாக்கியலக்ஸ்மி

3. படம்- தை பிறந்தால் வழி பிறக்கும் (1959)
பாடல்- ஆசையே அலை போல நாமெல்லாம் அதன் மேலே...
இப்பாடலானது கண்ணதாசனின் வாழ்வியலில் இருந்தே பாடல் வரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில் இப் பாடலுக்கான காட்சியமைப்பு, கதையமைப்பு என்பவற்றை கேட்டபின் காரில் வீடு திரும்புகின்றார் கண்ணதாசன்.
வரும் வழியில் ஒரு பாலத்தின் மேல் அவரின் கார் நிற்கின்றது. அந்த நேரத்தில் அவரின் கண் ஆற்றை பார்வையிட பாடல் எண்ணம் தோன்றுகின்றது. சட்டென ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதில் வரிகளை குறித்து வைத்துக் கொண்டார். இசை கோர்வையின் பின் இப்போதும் எம் செவிகளில் ரீங்காரம் இடும் இப்பாடலுக்கான இசையை M.S.V அவர்கள் வழங்கவில்லை என்பது சுவாரஸ்யம்..


4.படம் - சூரியகாந்தி
பாடல்- பரமசிவன் கழுத்திலிருந்து...
இன்றும் கண்ணதாசன் என்றால் சட்டென ஞாபகத்தில் வருவது இப்பாடலேதான்.. இப்பாடலின் மற்றொரு சிறப்பு கண்ணதாசன் முதல் முறையாக திரைப்படமொன்றில் நடித்த பாடலாகவும் இதுதான் விளங்குகின்றது.
இப்பாடலில் என் மனம் கவர்ந்த வரிகள்..-காலத்தின் நிலையை உணர்த்தி நிற்கும் வரிகள்..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்..
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..


5.இரு காதல் உள்ளங்களின் உள்ளக்கிடக்கையை பாடலில் கொண்டு வரும் கலையறிந்தவர் கண்ணதாசன் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் அமைந்த பல பாடல்களில் ஒன்றுதான் பாலும் பழமும் திரைப்படத்தின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. என்ற பாடலாகும்..
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்..


6. படம்- சுமைதாங்கி
பாடல்- மயக்கமா..கலக்கமா...
துன்பங்கள் சோகங்கள் வாழ்க்கையை வாட்டும் போது விரக்தியின் விளிம்பில் நிற்கும் எங்களுக்கு ஆறுதல் தந்து கரையேற்றி விட சில ஆலோசனைகள் வேண்டும். அப்படியான தேற்றல் வாக்கியங்கள் பலவற்றை கொண்ட இப்பாடல் மிகவும் என்னை கவர்ந்த பாடல்களில் ஒன்று.


ஒரு மனிதனுக்கு அவன் என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் துன்பம் என்ற ஒன்று வந்து விட்டால் முதலில் மயக்கம், பின் என்ன செய்வது என்ற கலக்கமும் குழப்பமும் வரும். குழப்பநிலை மோசமடைகையில் வாழ்க்கை நடுங்க ஆரம்பிக்கும்.. இத்தனை செயற்பாடுகளையும் ஒரு வசனத்தினுள் கொண்டு வந்து பின் அவற்றில் இருந்து விடுபட வேண்டிய தீர்வுகளை தொடர்ந்து முன்வைக்கும் அவரின் கவியழகு இன்றும் என்னை வியக்கவைக்கின்றது.
இப்பாடல் ஒருவரின் நிஜ வாழ்க்கையில் ஏற்படுத்திய மாறுதல்கள் பற்றிய தகவலை உங்களுடன் பகிர்கின்றேன்..
ஒரு கவிஞர் திரையுலகுக்கான வாய்ப்புகளை தேடி அலைந்த தருணம் அது. எந்த ஒரு கதவும் அவரின் கவிதைகளுக்காக திறக்கவில்லை. வேதனையின் உச்சியில் இனி கவிதை எழுதுவதில்லை என்ற விரக்திக்கே சென்று விட்டார். இந்நேரத்தில் தான் வீதியோரத்தில் இப்பாடலை கேட்கின்றார். புத்துணர்ச்சி பெறுகின்றார். வாழ்க்கையில் ஜெயிக்கின்றார். இன்று திரையுலகில் கவி மார்கண்டேயராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆம் கவிஞர் வாலி அவர்களேதான் இப்பாடலினால் பாடலாசிரியர் ஆனவர்.
இதோ பாடல்..


7.படம்- அவளுக்கென்று ஒரு மனம்
பாடல்- உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
கண்ணதாசன் அவர்கள் தான் எந்த அளவிற்கு தத்துவ பாடல்கள் எழுதுவாரோ அதே அளவிற்கு தரமான காதல் பாடல்களையும் தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளார் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்பாடலாகும்..
பாடலை முழுமையாக கேளுங்கள்... உங்களுக்கும் புரியும்..


8. காதலுக்கும் கண்ணதாசன் காதல் தோல்விக்கும் கண்ணதாசன் என்பார்கள்.. 100%உண்மை எனலாம். இப்பாடல் சோகத்துடனும் காதலுடனும் அமையும் பாடல் இதோ...
படம்- மூன்றாம் பிறை
பாடல் - கண்னே கலைமானே...


9. அடுத்த பாடல் பெண்மையை வர்ணிக்கும் விதமான பல பாடல்களுள் ஒன்று..
படம் - அலைகள்.
பாடல் - பொன்னென்ன பூவென்ன..
வரிகள் ஏலத்தில் விடப்பட்டால் தமிழே கடன் வாங்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன..


10. படம்- சரியாக தெரியவில்லை..
பாடல்- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..
என்னவோ தெரியவில்லை கேட்டவுடன் பிடித்து போன பாடல்களில் இதுவும் ஒரு இடத்தை பெற்றுக்கொண்டமை சூப்பர்.. ஜானகி அவர்களின் குரலுக்கு அடிமையாகிய எனக்கு இப்பாடலும் ஒரு வரமே..


குறிப்பு..- இப்பதிவை ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட மின்தடை இப்பதிவு முழுமையாக்கப்படுவதில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.. இப்போது முடிந்தவரை முழுமையாக்கி விட்டேன்...


நன்றி
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்...


Continue reading →
Wednesday, June 22, 2011

டீன் ஏஜ் கவர்மென்டின் Chief Minister விஜய்..- பிறந்த நாள் வாழ்த்துகள்

13 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இன்று இளைஞர்களின் நாயகன் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் 37வது பிறந்த நாள்..!

நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை..இருந்தும் தீவிர விஜய் ரசிகனாக இருக்கும் நான் அவரின் பிறந்த தினத்தில் ஒரு பதிவை பரிசாக்கி மகிழ்கின்றேன். இப்பதிவானது விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் ஸ்பெஷலாக விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.

 1974 ஜுன் மாதம் 22ம் திகதி சென்னையில் திரு.S.A.சந்திரசேகர், திருமதி ஷோபா சந்திரசேகர் ஆகியோர்க்கு மகனாக பிறந்தார் விஜய். இவர் பெற்றோரின் பாசமிகு மகனாகவும் தங்கைக்கு பாசமிகு அண்ணனாகவும் விளங்கினார். இருந்தும் அவர் தன் தங்கையை சிறு வயதிலேயே இழந்த வேதனையில் துவண்டிருந்த போது அவரை சோகக்கடலில் இருந்து கரையேற்றியது நடனக்கலை.

சிறுவயதிலேயே நடனத்தை முறையாக கற்ற விஜய் தன் தந்தை இயக்கிய திரைப்படங்கள் சிலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் ஊடாக திரையுலகில் நுழைந்தார். 1984ல் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகினார். அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..
அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன்(1985), சட்டம் ஒரு விளையாட்டு(1987) ஆகிய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

1992…. ரஜனி,கமல்,கார்த்திக்,பிரபு என திரையுலகில் சவாலான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அப்போது நாளைய திரையுலகிற்கான தீர்ப்பை எழுத வந்தார் கதாநாயகனாக விஜய். ஆக்ஸன் திரைப்படத்தில் ஆரம்பித்த அவரின் திரையுலக வாழ்வு 1996ல் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நிலையான ஒரு இடத்தை பதித்துக்கொண்டது. தொடர்ந்து காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா என நடிப்பில் முத்திரை பதித்து வந்தார்.

1999ல் வெளியாகிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற ஆரம்பித்தார். 2000ம் ஆண்டில் வெளியான குஷி, ப்ரியமானவளே மற்றும் 2001ல் வெளியான ப்ரண்ஸ், பத்ரி ஆகிய திரைப்படங்களும் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கிச் சென்றன. அத்துடன் இக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களிலும் விஜய் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியமானவளே திரைப்படத்தில் “மிஸிஸி ஸிப்பி…” பாடலும் ப்ரண்ஸ் திரைப்படத்தில் “ருக்கு ருக்கு..” பாடலும் பத்ரி திரைப்படத்தின் “என்னோட லைலா..” பாடலும் பெரும் பிரபல்யமான பாடல்களாகும்.



பகவதி திரைப்படத்தின் மூலம் ஆக்ஸன் ஹீரோவாக மாறிய விஜய் கில்லி, திருமலை,திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி என எதிரிகளை தன்னை வருத்தும் ஆக்ரோசமான சண்டைக்காட்சிகளில் புரட்டி எடுத்தார்.. இந்நிலையில் 2007ல் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளியானது. பெரிதாக பெயர் பெறாவிட்டாலும் விஜய் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.
சில சடுதியான வீழ்ச்சிகளை தொடர்ந்து இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியாக காவலன் திரைப்படம் மீண்டும் அவரை ரசிகர்களின் காவலனாக மாற்றியது. சீன திரைப்பட விழாவில் பெரிதும் புகழை பெற்ற திரைப்படம் இளைய தளபதியை நீண்ட நாட்களின் பின் Soft Hero வாக மாற்றிவைத்தது.

விரைவில் வெளியாக உள்ள வேலாயுதம் திரைப்படமும் அதனைத் தொடர்ந்து வெளிவரவுள்ள நண்பன் திரைப்படமும் நிச்சயமாக பெரு வெற்றி பெறும் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்…உறுதியுமாகும்.

இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களில் ஒன்றான திருப்பாச்சி அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சச்சின், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன் ஆகிய திரைப்படங்கள் தெலுங்கிலும் போக்கிரி ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு திரைப்படமாக்கப்பட்டுள்ளன..

அத்தோடு ஏனைய மொழிகளில் வெளியாகிய படங்களையும் தமிழில் மொழிபெயர்த்து தருவதிலும் விஜய் பின்தங்கியதில்லை. இவ்வாறு வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். அவ்வாறு வெளியாகிய படங்கள் பற்றிய விபரங்கள் கீழே..


விஜயின் பாடகன் அவதாரம் 1994ல் தேவா திரைப்படத்தில் அரங்கேறியது. அத்திரைப்படத்தில் இரு பாடல்களை விஜய் பாடியிருந்தார். அதில் ஒரு பாடல் இதோ..


தொடர்ந்து “தொட்டப் பெட்டா..”(விஷ்ணு-1994), “பம்பாய் சிட்டி…”(கோயம்புத்துார் மாப்பிள்ளை-1995), 1996ல் “திருப்பதி போனா மொட்டை..”(மாண்புமிகு மாணவன்), “அஞ்சாம் நம்பர் பஸ்ஸிலேறி..”(காலமெல்லாம் காத்திருப்பேன்), “சிக்கன் கறி..”(செல்வா) ஆகிய பாடல்களையும் “ஊர்மிளா ஊர்மிளா..”(ஒன்ஸ்மோர்- 1997), “விழியில் விழி மோதி..”(காதலுக்கு மரியாதை- 1997) என்ற பாடல்களையும் பாடினார்.


1998ம் ஆண்டு இவரின் பாடகர் வரலாற்றின் பொற்காலம் எனலாம். ப்ரியமுடன் திரைப்படத்தின் “மௌரியா மெளரியா..” பாடலும் நிலாவே வா திரைப்படத்தில் அமைந்த “நிலவே நிலவே….”, “சந்திர மண்டலத்தை…” ஆகிய பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தன.





அத்துடன் வேறு ஒரு நடிகரின் திரைப்படத்தில் பாடும் பண்பையும் விஜய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் 1998ல் வேலை திரைப்படத்தில் காலத்துக்கு “ஒரு கன..” என்ற பாடலையும் பெரியண்ணா திரைப்படத்தில் “நான் தம் அடிக்கிற…” மற்றும் “ரோட்டுல ஒரு…” ஆகிய பாடல்களையும் துள்ளித்திரிந்த காலம் திரைப்படத்தின் “டிக் டிக் டிக்…”ஆகிய பாடல்களையும் இதற்கு சான்றாக கூறலாம்.




பின்னர் 1999ல் நெஞ்சினிலே திரைப்படத்தில் “தங்க நிறத்துக்குதான்..” பாடலையும் 2000ம் ஆண்டில் “இரவு பகலை…” “சின்னஞ் சிறு…”(கண்ணுக்குள் நிலவு) ஆகிய பாடல்களுடன் ப்ரியமானவளே திரைப்படத்தில் அமைந்த “மிஸிஸி ஸிப்பி..” பாடலையும் விஜய் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து 2001ல் பத்ரி திரைப்படத்தில் “என்னோட லைலா..” பாடலையும் 2002ல் ப்ரண்ட்ஸில் “ருக்கு ருக்கு..” பாடலையும், தமிழன் திரைப்படத்தில் “உள்ளத்தை கிள்ளாதே..” பாடலையும் பகவதியின் “கொக்ககோலா..” பாடலையும் விஜய் சிறப்பாக பாடியிருந்தார்.


இறுதியாக இவர் பாடிய திரைப்பட பாடல் 2005ல் வெளியான சச்சின் திரைப்படத்தின் “வாடி வாடி வாடி..” பாடலாகும்.
இன்று வரை ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோள் விஜய் மீண்டும் திரைப்படத்தில் பாடவேண்டும் என்பதாகும். அது எப்போது நிறைவேறும் பொறுத்திருந்து பார்ப்போம்..

விஜய் வேலாயுதம் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பின் போது பாடிய பாடல் இதோ..
விஜயின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்பாடல் வரிகளை அவரின் குரலிலேயே கூர்ந்து கவனியுங்கள்..


குறிப்புக்கள்..:-
* விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள பிறந்த நாள் அறிக்கை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..
* விஜயின் மொத்த திரைப்படங்களினதும் பாடல்களையும் இங்கே ஒரே தளத்தில் பெறலாம்..

விஜயின் குரலில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
1998ல் வெளியாகி ஹிட் ஆன நிலாவே வா திரைப்படத்தில் இடம் பெற்ற நிலவே நிலவே.. என்ற பாடலாகும்.
வேகமான பாடலாக ஆரம்பிக்கும் இப்பாடல் இடையில் மெதுவாக செல்வதும் பின் வேகமடைவதும் சூப்பர்.
காதலியின் பதிலை வேண்டி நிற்கும் இப்பாடலில் விஜயின் கெஞ்சல்,ஏக்கம் கலந்த குரல் பிரமாதம்..!
அத்துடன் 
வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா..
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் இங்கு கலைந்ததுண்டா..
சொல்கின்ற மொழிகளில் தீர்ந்து விடும்.. சொல்லாத காதல் தீர்வதுண்டா..
ஆகிய வரிகளும்,
உள்ளங்கள் பேசும் மொழியறிந்தால் உன் ஜீவன் துடிக்க தேவையில்லை.. என்ற வரியும் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்..



மீண்டும் நம்ம மின்சார கண்ணன், மாண்பு மிகு மாணவன், பெண்களின் ப்ரியமானவன், எங்களை குஷிப்படுத்தும் யூத்தான அழகிய தமிழ் மகன், இதயங்களின் வேட்டைக்காரன், தமிழக மக்களின் எதிர்கால காவலன் எங்களின் நண்பன்(ப்ரண்ட்ஸ்), திரையுலகின் சுக்கிரன் என்றும் வெற்றிகளையே நாளைய தீர்ப்பாக எழுதும் தமிழன் இளைய தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..




விழித்திரு..தனித்திரு.. பசித்திரு… ஜெயித்திடு..

நன்றி.
மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்...,


Continue reading →
Photobucket